"ரஷ்ய அதிபர் புதின் மேற்கத்திய நாடுகளுக்கு விரைவில் அணு ஆயுத எச்சரிக்கை விடுக்கலாம்" - அமெரிக்கா அதிர்ச்சி தகவல்
மேற்கத்திய நாடுகளுக்கு அணு ஆயுத எச்சரிக்கையை ரஷ்ய அதிபர் புதின் விடுக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில் தொடர்ந்து 23-வது நாளான இன்றும் போர் நீடித்து வருகிறது.
உக்ரைன், நேட்டோ அமைப்பில் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த ரஷ்யா, உக்ரைன் மீது ராணுவத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
உக்ரைனின் முக்கிய நகரங்களான தலைநகர் கிவ், கார்கிவ், மரியுபோலில் ரஷ்ய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருவதால் சுமார் 30 லட்சம் உக்ரைன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
உக்ரைன் - ரஷ்யா இடையே நிலவி வரும் போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகிற போதும் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன.
மேலும், இந்த போரில், 14,000 ராணுவ வீரர்கள், 82 விமானங்கள், 95 ஹெலிகாப்டர்கள், 404 பீரங்கிகள், 1,283 ஆயுதம் ஏந்திய வாகனங்கள்,
640 வாகனங்கள், 3 போர்க் கப்பல்கள் உள்ளிட்டவை ரஷ்ய படைகள் இழந்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்நாட்டில் தொடர்ந்து பதற்றமான சூழலே இருந்து வருகிறது.
இந்நிலையில் விரைவில் மேற்கத்திய நாடுகளுக்கு அணு ஆயுத எச்சரிக்கையை ரஷ்ய அதிபர் புதின் விடுக்கலாம் என அமெரிக்க ராணுவத்தின் உளவுத்துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
இது குறித்து பென்டகன் உளவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“உக்ரைன் நாட்டின் பாதுகாப்பான பகுதிகள் ரஷ்யாவிற்கு சவாலை தருகின்றன. இதனால் அவர்களின் மனித சக்தி மற்றும் நவீனமயமாக்கப்பட்ட ஆயுதங்களின் எண்ணிக்கை குறைகிறது.
இதன் விளைவாக நீண்டகால பொருளாதார மந்தநிலைக்கு ரஷ்யா உள்ளாகலாம். இந்த போர் தொடர்ந்து நீளும்பட்சத்தில் அதன் விளைவுகள் ரஷ்யாவை பலவீனப்படுத்தும்.
ரஷ்யாவின் படையெடுப்பிற்கு உக்ரைனின் கடுமையான எதிர்ப்பு தொடர்கிறது. இதன் காரணத்தினால் அதிபர் விளாடிமிர் புதின் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அச்சுறுத்தல்களை விரைவில் விடுக்கலாம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.