வீட்டு குழாயை திறந்தால் மினரல் வாட்டர்... இந்தியாவில் இப்படியொரு மாநிலமா?
மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் 24 மணி நேர தரமான குடிநீரை வழங்கும் இந்தியாவின் முதல் நகரமாக பூரி மாறவுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தின் புனித நகரமான பூரியில் மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கால் சமீபத்தில் ட்ரிங்க் ஃப்ரம் டேப்' திட்டம் தொடங்கப்பட்டது. பூரியை உலகத் தரம் வாய்ந்த பாரம்பரிய நகரமாக மாற்ற வேண்டும் என்ற முதல்வர் நவீன் பட்நாயக்கின் கனவின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் தான் தற்போதைய இந்தியாவின் ஹாட் டாபிக் ஆக மாறியுள்ளது.
லண்டன், டோக்கியோ, நியூயார்க் மற்றும் சிங்கப்பூர் போன்ற சர்வதேச நகரங்களில் குழாயில் சுத்தமான குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில், தற்போது அந்த பட்டியலில் பூரியும் இணைந்துள்ளது.
அரசின் இந்த முயற்சியால் 3 கோடி அளவுக்கு பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்துவது குறைக்கப்படுவதோடு, 400 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் தவிர்க்கப்படும். அது மட்டுமில்லாமல் 16 லட்சம் மக்கள்தொகையை உள்ளடக்கிய ஒடிசா முழுவதும் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்பாட்டுக்கு வர உள்ளது.
அதற்கு பூரி முன்னோடி நகரமாக திகழ்கிறது.
பூரி நகரின் 2.5 லட்சம் மக்களுக்கும், ஆண்டுதோறும் புனித ஜகன்நாதர் ஆலயத்திற்கு வருகை தரும் 2 கோடி சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்த திட்டம் பயனளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.