”பிரிட்டன் இளவரசர் ஹாரி என்னை ஏமாற்றிவிட்டார்” - பஞ்சாப்பைச் சேர்ந்த பெண் பரபரப்பு புகார்!
பிரிட்டன் அரச குடும்பத்தின் இரண்டாவது இளவரசன் ஹாரி மற்றும் அவருடைய மனைவி மேகன் மெர்கேல் அரச குடும்பத்தின் பொறுப்புகளிலிருந்து அதிகாரப்பூர்வமாக கடந்த ஆண்டு விலகினர்.
இதனைத் தொடர்ந்து இருவரும் அமெரிக்காவில் குடியேறினர். அரச குடும்பத்தின் தான் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டதாக மேகன் பகிரங்கமான குற்றச்சாட்டை சமீபத்தில் முன்வைத்தார்.
பிரிட்டன் அரச குடும்பம் வருத்தம் தெரிவிக்கும் அளவிற்கு அந்த சர்ச்சை பெரிதானது. ஒரு வருடம் கழிந்த பின்னும் இளவரசர் ஹாரியை சுற்றி சர்ச்சைகள் இருந்து வருகின்றன.
இந்நிலையில் பஞ்சாப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் இளவரசர் ஹாரி மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை சுமத்தி வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
’தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இளவரசர் ஹாரி தன்னை ஏமாற்றிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என அந்த வழக்கில் கூறியிருந்தார்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதனை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்து தள்ளுபடி செய்துவிட்டனர்.
”மனுதாரர் பகல் கனவாக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். இதில் பல்வேறு பிழைகள் உள்ள நிலையில் இதில் உண்மையும் இல்லை.
சமூக ஊடகத்தில் ஏதோ போலியான கணக்குடன் பேசி மனுதாரர் ஏமாந்துள்ளார். சமூக ஊடகங்களில் பிரபலங்களின் பெயரில் இது மாதிரியான போலி கணக்குகள் உலவுகின்றன. இவரை ஏமாற்றிய இளவரசர் ஹாரி பஞ்சாப்பில் ஏதாவதொரு பிரவுசிங் செண்டரில் இருந்து கொண்டு இவரை ஏமாற்றி இருப்பார்” என்றுள்ளார்.