2 ஆண்டுகளாக 20 நாய்களுடன் அடைத்து வைக்கப்பட்ட 11 வயது சிறுவன் - என்ன நடந்தது?

Maharashtra
By Petchi Avudaiappan May 12, 2022 05:13 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

புனேவில்  2 ஆண்டுகளாக 20 நாய்களுடன்  11 வயது சிறுவன் அடைத்து வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சிறுவன் ஒருவர் நாய்களுடன் இருப்பதை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் பார்த்துள்ளார். அந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் அருகில் சென்று ஜன்னல் வழியாக பார்த்த போது அந்த அறையில் 20 நாய்களுடன் சிறுவன் அடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

உடனடியாக  இதுபற்றி நியான் தேவி குழந்தைகள் நல தொண்டு நிறுவனத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த தொண்டு நிறுவன அதிகாரிகள் அந்த அறையை ஆய்வு செய்த போது உள்ளே 4 நாய்கள் இறந்த நிலையில் கிடந்ததாகவும், விலங்குகளின் கழிவுகள் அகற்றப்படாததால் சுகாதாரமற்ற சூழல் நிலவியதாகவும் தெரிவித்தனர். 

மேலும் அந்த அறையின் வெளியே பூட்டியிருந்த நிலையில் சிறுவனின் பெற்றோரிடம் பேசி ஒரு வழியாக அச்சிறுவன் மீட்கப்பட்டான். 2 ஆண்டுகளாக நாய்களுடன் சிறுவனை அடைத்து வைத்ததால் அவனது செயல்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அவன் நாய்களை போன்றே செயல்பட தொடங்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவனது பள்ளி படிப்பும் நின்று விட்டது.

இதனைத் தொடர்ந்து வழக்கு எதுவும் பதியப்படாத நிலையில் சிறுவனுக்கு முறையான சிகிச்சை, கவுன்சிலிங் வழங்க போலீசாரிடம் வலியுறுத்தி உள்ளோம். குழந்தைகள் நல குழுவின் உத்தரவுகளையும் பின்பற்ற கேட்டு கொண்டுள்ளோம் என தொண்டு நிறுவன அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.