நீ எங்கேயும் போகல மாமா... எப்பவும் எங்க கூட தான் இருக்க... மிஸ் யூ மாமா... - புகழ் உருக்கமான பதிவு!
சின்னதிரையில் மிகவும் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. நடிகர் வடிவேலு மாதிரியே கெட்டப் போட்டு காமெடி செய்வதால் 'வடிவேல்' பாலாஜி என்று அழைக்கப்பட்டார்.
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான காமெடி நிகழ்ச்சிகளான 'அது இது எது', 'கலக்கப் போவது யாரு', 'கலக்கப் போவது யாரு சாம்பியன்ஸ்' உள்ளிட்ட பல நிகழ்ச்சியில் பங்கெடுத்துள்ளார்.
'தலைநகரம்' வடிவேலு மாதிரி கெட்டப் போட்டு, இவர் செய்த காமெடி சின்னத்திரையில் மிகவும் பிரபலம். சின்னத்திரையில் பிரபலமானதைத் தொடர்ந்து, சில படங்களிலும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கு சமயத்தில் பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டியும் அளித்திருந்தார்.
சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதியளிக்கப்பட்டதால், சில நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பில் கூட பங்கேற்றார் வடிவேல் பாலாஜி. திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருடைய கை, கால்களும் செயல் இழந்தது.
இதனிடையே போதிய பண வசதி இல்லாத காரணத்தால், அவரை அரசு மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். ஆனால், கடந்த ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் ‘குக் வித் கோமாளி’ புகழ் தனது இன்ஸ்டாவில் வடிவேல் பாலாஜி பற்றி உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அந்த பதிவில், ஒவ்வொரு முறையும் உங்க கூட தான் நான் வெளிநாடுக்கு போயிருக்கேன். ஆனா நீங்கள் இல்லாம முதல் தடவையா இப்பதான் வேற ஒரு நாட்டுக்கு போறேன். இந்த விமானப் பயணம் எப்படி இருக்க போகுதுனு தெரியல, ஆனா நிச்சயமா நாம ஒண்ணா சேர்ந்து போன பயணத்தை கண்டிப்பா நியாபகப்படுத்தும். நீ எங்கேயும் போகல மாமா, எப்பவும் எங்க கூட தான் இருக்க... மிஸ் யூ மாமா...❤️ என்று பதிவிட்டுள்ளார்.
தற்போது இந்த பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் பதிவை பார்த்த ரசிகர்கள் புகழுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.