புதுக்கோட்டை தேர் விபத்து; உரிய விசாரணை நடத்த வேண்டும் - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை தேர் விபத்து தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தேர் விபத்து
புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றானதும் புதுக்கோட்டை மன்னர் பரம்பரைக்கு குலதெய்வமாக விளங்கும் ஸ்ரீ பிரகதாம்பாள் உடனுறை கோகர்னேஸ்வரர் ஆலயத்தில் ஆடி திருவிழா கடந்த ஒன்பது நாட்களுக்கு முன்பாக கொடியேற்றத்துடன் வெகு விமர்சியாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து தினமும் ஆலயத்தில் இருந்து நான்கு வீதிகள் வழியாக பிரகதாம்பாள் அம்மன் விநாயகர் முருகன் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் வீதி உலா சென்றனர்.
இந்நிலையில் இன்று முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது இந்நிலையில் இன்று காலை தேர் புறப்பட்டு இரண்டு அடி கூட வெளியே வராத நிலையில் திடீரென சாய்ந்தது.
இதனால் அருகில் நின்று கொண்டிருந்த ஐந்து பேர் மீது தேர் கவிழ்ந்ததில் காயமடைந்த ஐந்து பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
விஜயபாஸ்கர் வேண்டுகோள்
இந்தநிலையில் சம்பவ நடந்த இடத்திற்கு சென்ற முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தேர் விபத்துக்கள் ஆங்காங்கே நடப்பது வருத்தம் அளிக்கிறது.மனதுக்கு கவலை அளிக்கிறது.
இந்த தேர் திருவிழாக்களை முறையாக நெறிபடுத்துவது, முறைப்படுத்துவது அரசின் கடமை என கூறினார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என சி.விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.