சிறுமி கொலை சம்பவம்; வலுக்கும் கண்டனங்கள் - முழு அடைப்பு போராட்டம்!
சிறுமி கொலை சம்பவத்தை கண்டித்து முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமி கொலை சம்பவம்
புதுச்சேரி சோலைநகரை சேர்ந்த 9-வயது சிறுமி சாக்கடை கால்வாயில் இருந்து கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக கஞ்சா பழக்கமுள்ள இளைஞரான கருணாஸ் (வயது19), விவேகானந்தன் (57) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு கொடூரமாக கொன்று சாக்கடை கால்வாயில் வீசியது தெரியவந்தது.
முழு அடைப்பு
சிறுமியின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கக்கோரி பொதுமக்கள், மாணவர்கள், சமூக அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன்படி, போதைப்பொருட்கள் புழக்கத்தை தடுக்க தவறிய அரசைக் கண்டித்தும், சிறுமியின் இறப்புக்கு நீதி கேட்டும் புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தியா கூட்டணி மற்றூம் அதிமுக சார்பில் ந்த முழுஅடைப்பு போராட்டம் காலை 6 மணிமுதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
இதன் காரணமாக பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன, அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல் செயல்படும். மாணவ-மாணவிகள் அச்சமின்றி தேர்வு எழுதலாம் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.