ராமர் கோயில் திறப்பு விழா; தீபாவளியாக கொண்டாடுவோம் - பொது விடுமுறை வழங்க கோரிக்கை!
ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு பொது விடுமுறை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராமர் கோயில்
உத்தரப்பிரதேசம், அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவிலுக்கு, பிரதமர் மோடி கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இங்கு 2.7 ஏக்கரில் 57,400 சதுர அடியில் 3 தளங்கள் அமைக்கப்படுகிறது. கோயிலை சுற்றி 70 ஏக்கரில் ஸ்ரீராமகுண்டம், அனுமன் சிலை, ராமாயண நூலகம், மகரிஷி, வால்மிகி ஆராய்ச்சி நிலையம், மூலவர் மண்டபம் உள்பட 6 மண்டபங்கள் அமைக்கப்பட உள்ளது. 161 அடி உயரத்தில் மூலவர் கோபுரம் கட்டப்பட்டுள்ளது.
பொது விடுமுறை?
தொடர்ந்து, ஜனவரி மாதம் 14ம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை செய்த பின்னர் 22ஆம் தேதி பக்தர்கள் தரிசனத்திற்கு முறைப்படி கோவில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விழாவைக் காண பொதுமக்களை அனுமதிக்க வரும் 22 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்க கோரி மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளதாக பாஜக கண்டிவாலி தொகுதி எம்எல்ஏ அதுல் பட்கல்கர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பிரதமர் மோடி நாட்டின் 140 கோடி மக்களும் ராம்லல்லாவின் சிலை கும்பாபிஷேகம் நடைபெறும் ஜனவரி 22-ம் தேதி, தங்கள் வீட்டில் ராம ஜோதி ஏற்றி, தீபாவளியைக் கொண்டாடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.