ராணிப்பேட்டையில் தேர்தலைப் புறக்கணித்த பொதுமக்கள்.. சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகாவில் உள்ளது கத்தாரிகுப்பம் ஊராட்சி மக்கள் தேர்தலை புறக்கணித்து உள்ளனர். டயர் தொழிற்சாலையை நிறந்தரமாக மூடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகாவில் உள்ளது கத்தாரிகுப்பம் ஊராட்சி.
இது வேலூர் காட்பாடி தொகுதிக்கு உட்பட்ட பகுதியாக உள்ளது. இங்கு வசிக்கும் 300 வீடுகளில் மொத்தம் தோராயமாக 992 வாக்குகள் உள்ளன. இந்த கிராமத்தில் டயரை எரித்து அதில் இருந்து ரசாயனம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று உள்ளது.
இந்த தொழிற்சாலையில் டயர்களை எரிப்பதனால் இப்பகுதி மக்களுக்கு சுவாசப் பிரச்சனை ஏற்படுகிறது என்றும் இந்த தொழிற்சாலையை அகற்றக்கோரியும் இப்பகுதி மக்கள் பல முறை போராட்டத்தில் ஈடுபட்டும், மனுக்கள் கொடுத்தும் உள்ளனர்.

சமீபத்தில் ஏப்ரல். 01 அன்று கூட இந்த தொழிற்சாலையை அகற்றக் கோரி இப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இது வரை மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று (ஏப்ரல். 06) நடைபெற்று வரும் பொதுத்தேர்தலை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இங்கு ஒரு வாக்குச்சாவடி உள்ளது.
இன்று காலை முதல் தற்போது வரை மொத்தம் 15 வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது.
தொழிற்சாலையை நிரந்தரமாக மூடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாவட்ட நிர்வாகம் சார்பாக யாரேனும் நேரில் வந்து உத்தரவாதம் அளித்தால் மட்டுமே வாக்களிப்போம் என்றும் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.