டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திடீர் சந்திப்பு - காரணம் என்ன?

Smt Nirmala Sitharaman Delhi Palanivel Thiagarajan
By Thahir Aug 02, 2023 03:02 AM GMT
Report

டெல்லியில் நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசினார்.

நிர்மலா சீதாராமனுடன் பிடிஆர் சந்திப்பு 

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடனான சந்திப்பு குறித்து பிடிஆர் தியாகராஜன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இன்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை டெல்லியில் உள்ள நாடாளுமன்ற இல்லத்தில் சந்தித்து, வருமான வரித் தரவுகளுடன் ஏபிஐ இணைப்பைப் பெற்ற முதல் மாநிலமாக தமிழகத்தை மாற்றியமைக்கு நன்றி தெரிவித்து மகிழ்ச்சி அடைந்தேன்.

PTR meeting with Minister Nirmala Sitharaman

நான் நிதி அமைச்சராகவும், ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினராகவும் இருந்த காலம் முழுவதும் ஒத்துழைப்பு வழங்கியமைக்கும் நன்றி தெரிவித்தேன். நடந்துகொண்டிருக்கும் மழைக்கால அமர்வின் நடுவே அவர் நேரம் ஒதுக்கியதற்கு நன்றி.

மாநிலங்களுக்கு வழங்கப்படும் ஜிஎஸ்டி கவுன்சிலின் தரவுப் பகிர்வின் முற்போக்கான நடவடிக்கையானது அரசாங்கத் திட்டங்கள், மானியங்களின் செயல்திறன் மற்றும் துல்லியத்தை அதிகரிக்கும்.

எனது பதவிகாலத்தில் ஆதரவளித்த மத்திய நிதிச் செயலாளர் டி வி சோமநாதன் ஐஏஎஸ், மற்றும் சிபிடிடி தலைவர் நிதின் குப்தா ஐஆர்எஸ் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தேன்” என்றார்.

முக்கிய பைல்களை வாங்கினார் 

இதனைத் தொடர்ந்து டெல்லியில் செய்தியாளர்க்ளை சந்தித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “ வருமான வரி தாக்கல் செய்பவர்கள் குறித்த தகவல் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டால், அதை வைத்து நலத்திட்டங்கள் மற்றும் பல சேவைகளை வழங்குவதை சரிபார்க்கலாம் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

PTR meeting with Minister Nirmala Sitharaman

இதுதொடர்பாக இந்த துறையுடன் இணைந்து பணிசெய்து, இப்போது இந்தியாவிலேயே முதல் மாநிலமாக வருமான வரி தாக்கல் செய்பவர்கள் சுமார் 35 லட்சம் பேரின் விவரங்கள் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

அந்த தகவல் பல திட்டங்களுக்கு, குறிப்பாக மகளிர் உரிமை திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு பயனாக இருக்கும்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் டிஎன்இஜிஏ என்ற நிறுவனத்தில்தான் அந்த தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அதிலிருந்து ஆய்வு அந்த பட்டியலில் உள்ளவர்களின் குடும்ப சூழ்நிலையை கண்டறிந்து, விதிமுறைக்கு யார் உட்பட்டவர்கள், யார் இல்லை, என ஆராய்ச்சி செய்கிறோம்.

எனவே தமிழ்நாடு வைத்த கோரிக்கையை ஏற்று இந்த முன்மாதிரி திட்டத்தை செய்து கொடுத்ததற்காக என் துறை சார்பாக மத்திய நிதி மந்திரி, நிதித்துறை செயலர் மற்றும் சிபிடிடி தலைவரை சந்தித்து முன்மாதிரியான சேவைக்கு நன்றி கூறினேன்” என்றார்.