பி.எஸ்.பி.பி பள்ளி விவகாரம்... புகார் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை என அமைச்சர் உறுதி..
பி.எஸ்.பி.பி பள்ளி புகார் தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும்,இதற்கு முன்னால் இதுப்போன்ற சம்பவம் நடைப்பெற்றுள்ளது நிரூபிக்கப்பட்டால் துறை ரீதியிலான் நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள பி.எஸ்.பி.பி பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இன்று சமூக வலைதளங்களில் வெளியான தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாடகி சின்மயி உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து இருந்தனர்.
இதனிடையே பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துறை சார்ந்த ஆய்வுகூட்டத்தில் பங்கேற்ற பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம் பி.எஸ்.பி.பி பள்ளி விவகாரம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு பி.எஸ்.பி.பி பள்ளியில் ஆசிரியர் பாலியல் புகார் தொடர்பாக பள்ளியில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்த பள்ளியும் ஒரு குழு அமைத்து உள்ளதாகவும் தெரிவித்தார். அதன்பின் உரிய விளக்கம் அரசுக்கு தெரிவிப்பதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்ததாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
மேலும், ஏற்கனவே இதுபோன்ற புகார் பள்ளியின் மீது பெற்றிருந்தால் கட்டாயம் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதியளித்தார்.