இந்தி திணிப்பை கண்டித்து உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்
இந்தி திணிப்பை கண்டித்து திமுக இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
அலுவல் குழு பரிந்துரை
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு அளித்துள்ள அறிக்கையில் மத்திய அரசு நடத்தும் ஐஐடி.. ஐஐஎம்… ஏய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களான உயர்கல்வி நிறுவனங்களில் கட்டாயமாக இந்தி மட்டுமே பயிற்று மொழியாக இருக்க வேண்டுமென்றும், ஆங்கில வழி கல்விக்கு பதிலாக இந்தி வழி கல்வியே கற்பிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் மத்திய அரசின் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளிலும் ஆங்கிலத்தை நீக்கி விட்டு, இந்தியில் மட்டும் தேர்வு நடத்தும் பரிந்துரையும் உள்ளது.
திமுக இளைஞரணி ஆர்ப்பாட்டம்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக இளைஞர் அணி - மாணவர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சென்னை வள்ளூவர் கோட்டம் அருகே திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் திமுக இளைஞர் அணி - மாணவர் அணி சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.