சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்வா?
Property Tax Chennai Hiked: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மூன்று முதல் நான்கு மடங்கு வரை சொத்து வரி அதிகமாக வந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியின் பிரதான வருவாயாக அமைந்துள்ள சொத்து வரி 4 மடங்கு உயர்ந்துள்ளதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கடந்தாண்டு 5000 ரூபாய் என்ற அளவில் இருந்த சொத்து வரி தற்போது 28000 ரூபாயாக அதிகரித்துவிட்டதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் சொத்து வரி உயர்த்தப்படவில்லை என மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் விளக்கம் அளித்துள்ளார்.

Property Tax அறிக்கை
இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்துவரி உயர்த்தப்படவில்லை, குறைவாகவோ அல்லது தவறாகவோ கணக்கிடப்பட்டு சொத்துவரி செலுத்தி வந்த சொத்தின் உரிமையாளர் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மட்டுமே திருத்தப்பட்ட சொத்துவரி விதிக்கப்பட்டுள்ளன.
செயற்கைகோள் தரவுகள், பிற அரசுத்தரவுகள் மற்றும் உரிமையாளர்களின் சுய அறிவிப்பு ஆகியவற்றின் மூலம் பரப்பளவு தொடர்பான முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.
திருத்தப்பட்ட வரி மதிப்பீட்டில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், அறிவிப்பை பெற்ற 15 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட மண்டல துணை ஆணையரிடம் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அத்தகைய மேல்முறையீடுகள் 30 நாள்களுக்குள் பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்படும். எனவே சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக பரப்பப்படும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.