“உள்ளத்தில் நல்ல உள்ளம்”, வறுமையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவச பயிற்சி ; உலக சாதனை படைக்க ஊக்குவித்த ஆசிரியர் ராஜேஷ்
முயற்சிகள் தவறலாம் ஆனால் முயற்சிக்க தவறாதே - இது அப்துல் கலாமின் முதுமொழி.
அதனை கடைபிடித்து தன்னால் செய்ய முடியாத சாதனையினை தன் மாணவர்கள் மூலம் செய்து சாதனை படைத்துள்ளார் ஒருவர்.
ஆம், மதுரையினை சேர்ந்த ராஜேஷ் பாபு தான் அவர்.
குட் சமரிட்டான் மேத்தமட்டிக்கல் பார்க் எனும் பெயரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்திவருகிறார்.
இதனால் பயன் அடைந்தவர்கள் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள். இவரது மாணவர்கள் பலதுறைகளில் பணியாற்றி வருகின்றனர் என்பது பெருமைக்குரியது.
அதுமட்டுமன்றி 2006-ம் ஆண்டு ஃபண்டமெண்டல் ஆஃப் மேத்தமட்டிக்ஸ் என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். ஆசிரியர் பணியை பணியாக மட்டுமின்றி ஒரு சேவையாக தொடரும் இவர் தற்போது கணிதத்தில் ஒரு உலக சாதனையை படைத்துள்ளார்.
கணிதவியலில் முக்கோணவியல் எனும் பாடத்தில் ஒரு வினாவிற்கு 300க்கும் மேற்பட்ட முறைகளில் தீர்வுகளை கண்டறிந்து அதை மாணவர்களுக்கு பயிற்றுவித்தார்.
இவரது மாணவர் கே.பி. விஸ்வ சாய் (வயது 17) காஞ்சுகேஷன் மெத்தட் மூலம் ஒரு வினாவிற்கு 50க்கும் மேற்பட்ட முறைகளில் தீர்வுகளை கண்டறிந்து உலக சாதனை படைத்தார்.
மேலும் ஹேமப்பிரியா(வயது 16) எனும் இவரது மாணவி அதே முக்கோணவியல் பாடத்தில் ஒரு வினாவிற்கு சுருக்க முறையில் 50க்கும் மேற்பட்ட வழிகளில் தீர்வுகளை கண்டறிந்து உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் தி யுனிவர்சல் ரெக்கார்ட்ஸ் ஆஃப் புக் மற்றும் ஃபூச்சர் கலாம் ஆஃப் புக்ஸ் வாயிலாக உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது மற்றும் நாளைய கலாம் விருது பெற்றதை அறிந்த தி யுவிவர்சல் தமிழ் யுனிவர்சிட்டி,
இவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி பெருமைப்படுத்தியது.
இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் ஆசிரியரும் அவரது மாணவர்களும் இணைந்து உலக சாதனை படைத்தது மட்டுமன்றி ஒரே மேடையில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றதும் உலகில் இதுவே முதல் முறை.
இந்த நிலையில் கணிதவியலில் சிறந்து விளங்கிய ஆசிரியருக்கும் அவரது மாணவர்கள் இருவருக்கும் பள்ளிப்பட்டு பேரூராட்சி பொதுமக்கள்,
ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.பிரணித் சாய் ஐபிஎஸ் அவர்கள் தலைமை ஏற்று உலக சாதனையாளர்கள் மனதார பாராட்டினார்.
இதுபோன்று ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து பல சாதனைகள் புரிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் இவ்விழாவில் ஏற்புரை வழங்கிய உலக சாதனையாளர் டாக்டர் க. இராஜேஷ் பாபு அவர்கள் சந்தோஷ காற்று இந்த சமூகத்தில் வீசட்டும் இந்த சமூகம் நம் சாதனையை பேசட்டும் என்று மாணவர்களை உற்சாகப்படுத்தி உரையாற்றினார்.
மேலும் இவ்வுலக சாதனையாளர்களை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் திரு.சந்திரன்,
நேர்மையின் அடையாளம் திரு. சகாயம் ஐஏஎஸ், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் திரு. ஆல்பி ஜான் வர்கீஸ்,
காவல்துறை கண்காணிப்பாளர் திரு. வருண் குமார் ஐபிஎஸ் மற்றும் பல அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் வெகுவாக பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இவர்களின் சாதனையினை பாராட்டி 14 - அக்டோபர் - 2021 அன்று ஏவுகணை நாயகன் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்த நாள் அன்று “டாக்டர்.ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது மற்றும் நாளைய கலாம் விருது” வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
மாணவர்கள் தான் இந்தியாவின் எதிர் காலம் என அப்துல் கலாம் கூறினார். அவரின் கனவை மெய்பிக்கும் வகையில் பல அகினி சிறகுகளின் துகள்களை உருவாகியுள்ளார் ராஜேஷ்.
இன்னும் அந்த மாணவர்கள் பல சாதனைகள் புரியவேண்டும் அவர்களின் சாதனை உலகமெங்கும் தெரிய ஐபிசி தமிழ்நாடு மூலம் வாழ்த்துவோம்.