கொரோனா வார்டில் உயிரழந்த நோயாளி: பல மணி நேரமாக உடல் அகற்றப்படாததால் ஏனைய நோயாளிகள் போராட்டம்
வேலூர் ஜி.பி.எச் சாலையில் உள்ள பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் சுமார் 70 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (மே. 20) ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பகுதியைச் சேர்ந்த 67 வயது மதிக்கத்தக்க கொரோனா நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஆனால், பல மணி நேரமாகியும் இறந்தவரின் உடலை எடுக்காததால் மற்ற நோயாளிகளுக்கு மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த நோயாளிகள் வார்டின் உள்ளேயே அமர்ந்தும், காலை உணவு உண்ணாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\
இதனைத் தொடர்ந்து இறந்தவர் உடல் வார்டில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இறந்தவர் வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், இரவு நேரத்தில் உயிரிழந்ததாலும் ராணிப்பேட்டையில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
மேலும் அங்கு இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்யவும் சற்று தாமதம் ஏற்பட்டதால் தான் உடல் அகற்ற நேரம் ஆகியதாக மருத்துவமனை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். உடல் அகற்றப்பட்ட பிறகு கொரோனா வார்டில் இயல்பு நிலை திரும்பியது.