‘என் தம்பிக்காக என் உயிரை கூட கொடுக்க தயங்க மாட்டேன்...’ - பிரியங்கா காந்தி நெகிழ்ச்சி பேச்சு
உத்தரகாண்ட், உத்திரபிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் ஆட்சியை கைப்பற்றும் முனைப்போடு பாஜக மற்றும் காங்கிரஸ் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசுகையில், காங்கிரஸ் கட்சி நலிவடைந்து விட்டது. ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் சேர்ந்து கீழே இழுத்துச் செல்கிறார்கள். அக்காவிற்கும், தம்பிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இது எப்போது வேண்டுமானாலும் பூகம்பமாக வெடிக்கும் என்றார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரியங்கா காந்தி பேசியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது -
எனது சகோதரர் ராகுலுக்கு நான் என் உயிரையும் தியாகம் செய்ய தயங்க மாட்டேன். அவரும் எனக்காக எது வேண்டுமானாலும் செய்வார். எங்களுக்குள் எந்த பிளவும் கிடையாது. கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் சிலர் கூறி வருகிறார்கள். இவையெல்லாம் உண்மை கிடையாது.
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு யார் இருந்த இடம் தெரியாமல் போகப்போகிறார்கள் என்று பார்ப்போம். பாஜகவில் தான் மோதல் கருத்து வேறுபாடு எல்லாம் இருக்கிறது. எங்களிடம் கிடையாது. உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்க்கும், மத்திய மந்திரி அமித் ஷாவுக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பது நாடறிந்த ஒன்றுதானே.
இவ்வாறு அவர் கூறினார்.