100 போட்டிகளில் விளையாடிய பிறகு இந்திய அணியில் இடம் பிடித்த வீரர் - ஆச்சரியத்தில் ரசிகர்கள்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சேர்க்கப்பட்டுள்ள இந்திய வீரர் பிரியாங் பாஞ்சாலின் சாதனைகள் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் மும்பையில் இந்திய வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வந்தனர்.
அப்போது அணியின் துணைக் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதாகவும், இதனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து அவர் விலகியதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. அவருக்குப் பதிலாக பிரியாங் பாஞ்சால்அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவர் நடந்து முடிந்த தென்னாப்பிரிக்க ஏ தொடரில் இந்திய ஏ அணியை வழிநடத்தினார். இதில் தொடக்க வீரராக களமிறங்கிய பாஞ்சால் அதிகபட்சமாக 96 ரன்கள் சேர்த்தார். 2008ஆம் ஆண்டு உள்ளூர் கிரிக்கெட்டில் அறிமுகமாகி சுமார் 13 ஆண்டுகளாக விளையாடி வருகிறார்.சமீபத்தில் உள்ளூர் கிரிக்கெட்டில் தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய அவர்,7011 ரன்கள் குவித்துள்ளார். இதில் 24 சதமும், 25 அரைசதமும் அடங்கும்.
இதனால் 2016-17 ஆம் ஆண்டில் ரஞ்சி கோப்பையில் குஜராத் அணிக்காக களமிறங்கிய பாஞ்சால் 10 போட்டிகளில் 1310 ரன்களை சேர்த்து அசத்தியுள்ளார். இதில் 5 சதங்கள் அடங்கும். 31 வயதான பிரியங் பாஞ்சால், கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மாற்று வீரராக இந்திய அணியில் இடம்பெற்றார். தற்போது 100 போட்டிகளில் விளையாடிய பிறகு தான் இந்திய அணியில் இடமே கிடைத்துள்ளது. அதுவும் முன்னணி வீரருக்கு காயம் ஏற்பட்டதால் கிடைத்தது.
தற்போது தென்னாப்பிரிக்க தொடரிலும் பிரியாங் பாஞ்சாலுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. ஏனெனில் மாயங் அகர்வால் அணியில் உள்ளதால் அவரே கே.எல்.ராகுலுடன் களமிறங்கவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, இந்திய அணிக்கு தேர்வானது குறித்து மகிழ்ச்சி அளிப்பதாக பிரியாங் பாஞ்சல் கூறியுள்ளார். தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பி 3 நாள் கூட ஆகாத நிலையில் மீண்டும் தென்னாப்பிரிக்காவிற்கு செல்ல உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
You May Like This