பேருந்து தீப்பிடித்து பயங்கர விபத்து - 25 பயணிகள் பலி
பேருந்து விபத்தில் 25 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பேருந்து விபத்து
தெலங்கானா, ஹைதராபாத்தில் இருந்துவி காவேரி எனும் தனியார் சொகுசு பேருந்து 41 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆந்திரா, கர்னூல் வழியாக பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது, 44-வது தேசிய நெடுஞ்சாலையில் சின்ன டேக்கூரு எனும் இடத்தில், முன்னால் சென்று கொண்டிருந்த பைக் மீது இந்த சொகுசு பேருந்து வேகமாக மோதியது. இதில், பைக்கில் இருந்தவர் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆனால், பேருந்தின் அடியில் அந்த பைக் சிக்கி கொண்டது. பேருந்தின் ஓட்டுநர் இதனை கவனிக்காமல் பேருந்தை சுமார் 350 மீட்டர் வரை ஓட்டியுள்ளார். இதில் பைக்கில் இருந்த பெட்ரோல் டேங்க் வெடித்துள்ளது.
அதிலிருந்து பேருந்தின் டீசல் டேங்கில் தீப்பற்றி, மளமளவென பேருந்து முழுவதும் தீ பரவியுள்ளது. அதில் கீழ் வரிசையில் உள்ள படுக்கையில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மட்டுமே பேருந்தில் இருந்து இறங்கி உயிர் பிழைத்துள்ளனர்.
25 பேர் பலி
சிலர் அவசர காலத்தில் உதவும் எமர்ஜென்சி எக்சிட் கதவை உடைத்து கொண்டு வெளியேறினர். இவர்களில் பலர் படுகாயமடைந்துள்ளனர். ஆனால் மேல் படுக்கையில் படுத்து தூங்கி கொண்டிருந்தவர்கள் 25 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.

இறந்தவர்கள் சிலரின் உடல்களுக்கு பிரேத பரிசோதனை நடத்தி அவரவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.பேருந்து தீ விபத்து குறித்து அறிந்த குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.
மேலும், பிரதமர் நிதியில் இருந்து இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரு.50 ஆயிரமும் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான பேருந்து ஓட்டுநரை கைது செய்துள்ளனர்.