சுற்றுச்சூழலை பாதுகாக்க 'பிரதமரின் இ-பஸ்' திட்டம் - தமிழகத்தில் எந்தெந்த நகரங்களில்?
பிரதமரின் இ-பஸ் திட்டத்திற்கு தமிழகத்தில் இருந்து 11 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இ-பஸ் திட்டம்
பெட்ரோலிய பொருட்கள் பயன்பாடு மற்றும் மாசு குறைப்புக்கு உதவியாக இந்தியாவில் தற்போது இருசக்கர வாகனங்கள் முதல் பேருந்துகள் வரை மின்சார வாகனங்கள் வந்துள்ளன.
அந்தவகையில் 'பிரதமரின் இ-பஸ்" என்ற பெயரில் புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு இந்த முடிவை மேற்கொண்டது.
இதற்காக நாடு முழுதும், 169 நகரங்களில், 10,000 இ -பஸ்கள் இயக்க, 20,000 கோடி ரூபாயை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மேலும் இ-பஸ்களை இயக்குவதற்கான நகரங்களை தேர்வு செய்யும் பணிகளும் முடிவடைந்துள்ளது.
எந்தெந்த நகரங்கள்?
இது தொடர்பாக மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் "பிரதமரின் இ-பஸ் திட்டத்தில், தமிழ்நாட்டில் 3 லட்சத்துக்கும் மேலான மக்கள் வசிக்கும் நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக கோவை, மதுரை, திருச்சி, ஈரோடு, சேலம், திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலுார், ஆவடி, அம்பத்தூர் ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்நகரங்களில் இ-பஸ் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை தமிழக அரசு அனுப்ப வேண்டும். இத்திட்டத்தில் 10 ஆண்டுகளுக்கான செலவுக்கான நிதியையும், மத்திய அரசே வழங்க வாய்ப்புள்ளது' என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.