"என்னை பார்ப்பது இதுவே கடைசியாக இருக்கலாம், எனக்கு பிறகும் நாட்டை பாதுகாக்க மக்கள் துணிந்து போராடுவார்கள்” - உக்ரைன் அதிபர் உருக்கம்
உக்ரைன் மீது ரஷ்யா 12-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடுத்துள்ள இந்த போர் 21-ம் நூற்றாண்டில் இதுவரை எந்த உலக நாடுகலும் கண்டிராத போராக மாறி வருகிறது.
உக்ரைனின் முக்கிய நகரங்களை சின்னாபின்னமாக்கி வரும் ரஷ்ய படைகள் ராணுவ கட்டமைப்புகள் மட்டுமின்றி குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிகள்,
வணிக வளாகங்கள் என தாக்குதலை விரிவுபடுத்தி, சர்வதேச கிரிமினல் கோர்ட்டின் வழக்கை எதிர்கொள்ளும் நிலையை ரஷ்யா தேடிக்கொண்டது.
கடந்த 11 நாள் போரில் இதுவரை 15 லட்சம் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் கமிஷனர் கூறியுள்ளார்.
இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,
“உக்ரைன் வான்பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கவேண்டும் என தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன்.
அப்படி அறிவித்தால் உக்ரைன் மீது பறந்து வரும் ரஷ்ய விமானங்களை மற்ற நாட்டு போர் விமானங்களால் சுட்டு வீழ்த்த முடியும். ஆனால் நேட்டோ நாடுகளும், அமெரிக்காவும் எனது கோரிக்கையை ஏற்க தயங்குகின்றன.
இதனால் உக்ரைன் மக்கள் அடுத்தடுத்து பாதிப்புகளை சந்தித்து வருகிறார்கள். அடுத்து என்ன நடக்கும் என்பது உறுதியாக தெரியவில்லை.
ரஷ்ய படைகள் எங்களின் முக்கிய நகரங்களை முற்றுகையிட்டுள்ளன. குடியிருப்பு பகுதிகளில் அதிகமாக குண்டுகளை போடுகிறார்கள். இதனால் மக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனது உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. இதுவே நீங்கள் என்னை பார்க்கும் கடைசி தருணமாகக் கூட இருக்கலாம். உலக நாடுகள் இந்த போரை இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது.
எங்களுக்கு உதவ முன்வரவேண்டும். எங்களுக்கு தேவையான ஆயுதங்களை தாருங்கள். ஐரோப்பிய நாடுகள் ஒருங்கிணைந்து எங்களுக்கு அதிக போர்விமானங்களை வழங்க வேண்டும்.
அப்படி கொடுத்தால்தான் உக்ரைன் தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியும். இந்த விஷயத்தில் ஐரோப்பிய நாடுகள் நல்ல முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
என்னை படுகொலை செய்வதற்கு ரஷ்ய அதிபர் புதின் சிறப்பு படைகளை அனுப்பி உள்ளார். நூற்றுக்கணக்கான ரஷ்ய உளவுப்படைகள் கீவ் நகரில் உள்ளன. அவர்கள் என்னை குறி வைத்து நகர்ந்து வருகிறார்கள்.
எந்த நேரத்திலும் நான் படுகொலை செய்யப்படலாம். இதை எல்லாம் நான் ஏற்கனவே நன்கு உணர்ந்துள்ளேன். எனவே உக்ரைன் நாட்டு நலனுக்காக மாற்றுத்திட்டங்களை ஏற்கனவே தயார் செய்து வைத்துவிட்டேன்.
நான் கொல்லப்பட்டாலும் உக்ரைனில் இந்த ஆட்சி தொடர்ந்து நடைபெறும். அதை யாராலும் முடக்க முடியாது. எனக்கு பிறகும் உக்ரைன் நாட்டை பாதுகாத்துக் கொள்ள மக்கள் துணிந்து போராடுவார்கள்.
இதற்காக வெளிநாடுகளில் உள்ள உக்ரைன் மக்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள். எங்கள் மண்ணை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம். ஒரு போதும் பின்வாங்கும் பேச்சுக்கே இடம் இல்லை” என உருக்கமாக பேசியுள்ளார்.