பேரறிவாளன் விவகாரம் - குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல்
பேரறிவாளன் விவகாரத்தில் முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து தற்போது பிணையில் உள்ள பேரறிவாளன்,தன்னை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அதன் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மீண்டும் பேரறிவாளன் வழக்கு நேற்று முந்தினம் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாநில அமைச்சரவை தனக்குரிய சட்ட அதிகார பிரிவின் கீழ் முடிவெடுத்து ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பும் விஷயம் மீது ஆளுநர் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை செலுத்த முடியாது என்றும்,
மேலும், இந்த விவகாரத்தில் ஒரு நபரை விடுவிக்கவோ அல்லது விடுவிக்க மறுக்கவோ தனிப்பட்ட முறையில் அவர் முடிவெடுக்க முடியாது என்றும் மாநில அமைச்சரவையின் முடிவிற்கு ஆளுநர் முழுமையாக கட்டுப்பட்டவர் என்று கருத்து தெரிவித்தனர்.
இதனையடுத்து, சுமார் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யக் கோரிய வழக்கில் வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.
இதனை தொடர்ந்து பேரறிவாளன் விவகாரத்தில் முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
மேலும் அந்த மனுவில் குற்றத்தின் தீவிரத்தன்மை மற்றும் ஆதாரங்களை கருத்தில் கொள்ளாமல் மாநில அமைச்சரவை பேரறிவாளன் விவகாரத்தில் முடிவெடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.