காதல் சின்னம் தாஜ்மஹால் - புகைப்படம் எடுத்து மகிழ்ந்த அதிபரின் மகன் மற்றும் மருமகள்!
தாஜ்மஹாலில் புகைப்படம் எடுத்துக்கொண்ட இந்தோனேசிய அதிபரின் மகன் மற்றும் மருமகள்.
இந்தோனேசிய அதிபர்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜி20 அமைப்பின் 18வது உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் கோலாகலமாக இன்று தொடங்கியது.
இந்த மாநாட்டிற்கு இந்தியா தலைமை வகிக்கிறது. மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட பல உலகத் தலைவர்களை இந்திய பிரதமர் மோடி வரவேற்றார். முன்னதாக இந்தோனேசியா நாட்டின் அதிபர் ஜோகோ விடோடோ மற்றும் அவரின் மனைவி இரியானா ஜோகோ விடோடோ வெள்ளிக்கிழமை அன்று இந்தியா வந்தனர்.
விடோடோவின் மூன்றாவது மகனும், யூடியூபருமான கேசங் பங்கரேப் மற்றும் அவரின் மனைவி எரினா குடோனோவும் உடன் இருந்தனர். மாநில அமைச்சர் சாந்தனு தாக்கூர் அவர்களை வரவேற்றார். அவர்களை வரவேற்க நடனக் கலைஞர்கள் குழு பாரம்பரிய நாட்டுப்புற நடனம் ஆடினர்.
தாஜ்மஹால்
இந்நிலையில் அதிபர் ஜோகோ விடோடோவின் மகன் கேசங் பங்கரேப் மற்றும் அவரின் மனைவி எரினா குடோனோவும் இருவரும் 7 உலக அதிசயங்களில் ஒன்றான, ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கு நேரில் சென்று கண்டு களித்தனர்.
பின்னர் இருவரும் தாஜ்மஹாலுக்கு முன் உள்ள ஒரு பெஞ்சில் அமர்ந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.