நடிகர் சங்க தலைவர் யார்? - தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது

tamilnadu NadigarSangamelection
By Irumporai Mar 20, 2022 03:13 AM GMT
Report

கடந்த 2015 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நடந்த தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது.இந்த அணி நிர்வாகிகளின் பதவிக்காலம் 2018 ஆம் ஆண்டு அக்டோபரில் முடிவடைந்த நிலையில்,செயற்குழு ஒப்புதலுடன் பதவிக்காலம் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது.

இரு அணிகள் மோதல்: இதனையடுத்து,கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி நடந்த நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது.அதன்படி,தலைவர்,இரு துணைத் தலைவர்கள், பொதுச்செயலாளர்,பொருளாளர்,செயற்குழு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது.இத்தேர்தலில் கே.பாக்யராஜ் தலைமையிலான அணியும்,நாசர் தலைமையிலான அணியும் போட்டியிட்டன.

மொத்தம் பதிவான 2500 வாக்குகளில் சுமார் 1150 வாக்குகள் தபால் மூலம் பதிவு செய்யப்பட்டன. தேர்தல் செல்லாது: இதனிடையே,பதவிக்காலம் முடிந்த செயற்குழு மூலம்,ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை தேர்தல் அதிகாரியாக நியமித்து தேர்தலை அறிவித்துள்ளது சட்ட விரோதமானது மற்றும் நடிகர் சங்க உறுப்பினர்கள் பலர் நீக்கப்பட்டுள்ளதால்,முறையான வாக்காளர் பட்டியலை தயாரித்து நியாயமாக தேர்தல் நடத்த குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் எதிர்தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.

மேலும்,61 உறுப்பினர்கள் வாக்காளர் பட்டியிலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து அளித்த புகாரின் அடிப்படையில்,தேர்தல் செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.இதனால்,வாக்குப்பெட்டிகள் ஒரு தனியார் வங்கியில் இரண்டரை ஆண்டுகள் வைக்கப்பட்டது.

உயர்நீதிமன்றம் உத்தரவு: அதன் பின்னர்,தேர்தல் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து நாசர்,விஷால் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.இதனை விசாரித்த உயர் நீதிமன்றம்,தேர்தல் செல்லும் என்றும், ஓட்டுகளை எண்ணவும் உத்தரவிட்டது.

வாக்கு எண்ணிக்கை: இந்நிலையில்,தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் அவர்கள் முன்னிலையில் எண்ணப்படுகின்றன.

முன்னதாக நடைபெற்ற இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு நாசர்,பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால்,பொருளாளர் பதவிக்கு கார்த்தி போட்டியிட்டனர்.மறுபுறம் தலைவர் பதவிக்கு பாக்கியராஜ்,பொதுச்செயலாளர் பதவிக்கு ஜாரி கணேஷ்,பொருளாளர் பதவிக்கு பிரசாந்த் ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்த நிலையில்,வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் எந்த அணி வெற்றி பெறும்? தலைவர் யார்? என்பது தெரிய வரும்.