விருத்தாச்சலம் எங்கள் உயிரோடும் உணர்வோடும் கலந்த தொகுதி - பிரேமலதா பேட்டி
விருத்தாச்சலம் தொகுதி எங்கள் உயிரோடும் உணர்வோடும் கலந்த தொகுதி என அந்தத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். விருத்தாச்சலம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்துவிட்டு பிரேமலதா செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.
விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பிரேமலதா, தனது சகோதரர் சுதீஷுடன் இன்று விருத்தாசலம் தேர்தல் நடத்தும் அலுவலகம் வந்தார். அப்போது பிரவீன்குமாரிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். வேட்புமனுத் தாக்கல் செய்தபின் அவர் பேசியதாவது - ''2006-ல் விஜயகாந்த் இத்தொகுதியில் போட்டியிட்டபோது அவருக்கு ஆதரவு தந்து அவரைச் சட்டப்பேரவை உறுப்பினராக்கியது இந்தத் தொகுதி மக்கள்தான். எனவே எங்கள் உயிரோடும், உணர்வோடும் கலந்தது இத்தொகுதி.
அதனால் விருத்தாச்சலம் தொகுதியில் முரசு சின்னத்தில் போட்டியிட்டும் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாகத் தேர்தலில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தேன். தற்போது முதல் முறையாகத் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்குகிறேன்.
மேலும், வாக்குப் பதிவுக்கான காலம் மிகக் குறுகிய காலமாக இருப்பதால் மற்ற தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய முடியவில்லை. விஜயகாந்தும், விஜய பிரபாகரனும் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் பங்கேற்பார்கள். எனது முழுக் கவனமும் விருத்தாச்சலம் தொகுதியில்தான் இருக்கும் என்று பேசினார்.