பிரேமலதா விஜயகாந்திற்கு கொரோனா நெகட்டிவ்
தேமுதிக பொருளாளரும், விருத்தாச்சலம் தொகுதி தேமுதிக வேட்பாளருமான பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா இல்லை என பரிசோதனையில் தெரியவந்துள்ளது அமமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக 60 தொகுதிகளில் களம் காண்கிறது. இந்த நிலையில் கட்சியின் பொருளாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா, விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதற்காக கடந்த 18 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது பிரேமலதாவின் சகோதரரும் தேமுதிக துணைச் செயலாளருமான எல்.கே.சுதீஷ் உடனிருந்தார். சுதீஷுக்கும் அவரது மனைவிக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த பிரேமலதாவை, கொரோனா பரிசோதனை செய்யுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்தனர்.
இதனால் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் பிரேமலதா உள்ளிட்ட 12 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் பிரேமலதாவுக்கு நெகட்டிவ் என வந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.