தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் தருவது அதிமுகவின் கடமை - பிரேமலதா அதிரடி
மாநிலங்களவை தேர்தல்
தமிழ்நாடு சார்பில் மாநிலங்களவை எம்.பி.க்களாக உள்ள வைகோ, அன்புமணி, பி.வில்சன், எம்.சண்முகம், என்.சந்திரசேகரன், எம்.முகமது அப்துல்லா ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 27 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்த 6 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தல், வரும் ஜூன் 19ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
திமுக 4 எம்பிக்களை தேர்வு செய்வதற்கு வாய்ப்புள்ளதால் திமுக சார்பில், மக்கள் நீதி மைய்ய தலைவர் கமல்ஹாசன், பி.வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகிய 4 பேரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 2 எம்.பி.க்களை அதிமுக தேர்வு செய்ய வாய்ப்புள்ள நிலையில், அதிமுக சார்பில் எம்பி ஆக போகும் இருவர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட்
கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலின் போது, ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக அதிமுக உறுதிமொழி அளித்தது. அதன்படி தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களை சீட் தர வேண்டும் என தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
ஆனால், அதிமுக அப்படி எந்த உறுதிமொழியையும் வழங்கவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
முன்னதாக இது குறித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், "மாநிலங்களவை பதவி தேமுதிகவுக்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். பொறுமை கடலினும் பெரிது" என்று கூறினார்.
அரசியலில் நம்பிக்கை முக்கியம்
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “தேமுதிகவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பது அதிமுகவின் கடமை. அதிமுக உடனான கூட்டணியில் மாநிலங்களவை இடத்தைப் பெறுவது தேமுதிகவின் உரிமை.
2024 மக்களவைத் தேர்தல் பேச்சுவார்த்தையின்போதே இந்த முடிவு எட்டப்பட்டது. பொறுத்தவர்கள் பூமி ஆள்வார்கள். அரசியலில் நம்பிக்கை முக்கியம். சொன்ன வார்த்தைகளைக் காப்பாற்றினால் தான் மக்கள் உங்களை நம்புவார்கள்.
ஏற்கெனவே 2 முறை தேமுதிகவுக்கு மாநிலங்களவை பதவி கிடைக்க வேண்டியது. ஒரு முறை அன்புமணியும், இன்னொரு முறை ஜி.கே. வாசனும் பெற்றுக் கொண்டனர். இந்த முறை எங்களுக்கு தர வேண்டியது அவர்களின் கடமை" என தெரிவித்துள்ளார்.