விஜய் வீடு தேடி வந்து துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார் - பிரேமலதா விஜயகாந்த்
நான் ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் விஜய் வீடு தேடி வந்து துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார் என பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.
துணை முதல்வர் பதவி
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "தேமுதிக என்றால் பேரம் என சொன்னிங்களே.. எந்த பேரத்திற்கும், எந்த பதிவிற்கும் ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக என்பதை இந்த தேர்தலில் நிரூபித்திருக்கிறோம்.
பதவிக்கோ, பணத்திற்கோ, சோபா செட்டிற்கோ, பெட்டிக்கோ எதற்கும் ஆசைப்படாத, ஒரு சீட் கிடைத்திருந்தாலும், தர்மத்தோடு நாம் வகிக்கும் கூட்டணிக்கு விசுவாசமாக உள்ள கட்சி தேமுதிக.
நான் நினைத்திருந்தால் என்னால் விஜய்யை பார்த்திருக்க முடியாதா? அமைச்சர் பதவிக்கு எல்லாம் ஓடுறாங்க. அமைச்சர் என்ன நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் விஜய்யே வீடு தேடி வந்து துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார். இதுதான் உண்மை.
ஆனால், இதற்கு எல்லாம் ஆசைப்படும் கட்சி இல்லை தேமுதிக. என்றைக்கும் நாம் எடுத்துக்கொண்ட கொள்கை, கூட்டணி தர்மம் ஆகியவற்றில் உறுதியாக இருப்பதற்கு இதுவே சாட்சி.
துரந்தர் விமர்சனம்
மதசார்பற்ற கூட்டணியில் பிரேமலதா விஜயகாந்த் துரந்தராக இருக்கிறார் என ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தார். துரந்தர் என்பது ஹிந்தி வார்த்தை. அதற்கு ஹிந்தி தெரியாது போடா என்பதே என் பதில். இந்த வார்த்தையைச் சொன்னவர் துரந்தராக மாறாமல் இருந்தால் வரவேற்கத்தக்கது.

இப்போது நடந்து முடிந்த தேர்தல் உண்மையான தேர்தல் இல்லை என்பது தான் மக்களின் கருத்து. இது ஒரு சுனாமி, இது ஒரு மாயை. தேமுதிக மட்டும் தோற்கவில்லை. அண்ணன் ஸ்டாலினே சிங்கப்பூர் போல் தொகுதியை மாற்றி உள்ளார் அவரே தோல்வியடைந்து விட்டார்.
அதிமுக எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தது தமிழ்நாட்டுக்கு இது ஒரு தலைகுனிவு.. இப்படி ஒரு நிலைமை வரும்னு யாரும் கனவுல கூட நினைக்கல. இது வாக்களித்த மக்களுக்கு செய்த துரோகம்" என பேசியுள்ளார்.