பிரசவ வலிக்கு பயந்து கர்ப்பத்தை கலைக்க மாத்திரை சாப்பிட்ட பெண் உயிரிழப்பு

Death Women Pregnant
By Thahir Sep 28, 2021 09:35 AM GMT
Report

சென்னை கொரட்டூர், தந்தை பெரியார் நகர் பகுதியில் வசித்து வந்தவர் குமாரி கஞ்சக்கா (வயது 23). இவரது கணவர் பிரதாப் உள்கா. இவர்கள் ஒடிசாவை சேர்ந்தவர்கள்.

பிரதாப், சென்னையில் கூலி வேலை செய்து வருகிறார். தற்போது குமாரி, 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்தநிலையில் ஒடிசாவில் குமாரியின் அண்ணி பிரசவத்தின்போது இறந்து விட்டார்.

அந்த இறுதிச்சடங்கில் பங்கேற்க சென்ற குமாரி, கடந்த 19-ந் தேதி சென்னை திரும்பி வந்தார். அதன்பிறகு குமாரிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு வலிப்பு வந்ததால் ஸ்கேன் செய்து பார்த்ததில் கர்ப்ப பையில் பாதிப்பு உள்ளதாக கூறி அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூறினர்.

அதன்படி நேற்று கர்ப்பபை அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பிறகு குமாரி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இதுபற்றி கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில் அண்ணியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சென்ற குமாரி, 7 மாத கர்ப்பமாக உள்ள தானும் அண்ணியை போல் பிரசவத்தின்போது இறந்து விடுவமோ? என பயந்து, தனது கர்ப்பத்தை கலைக்க அங்கு மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.