திருமணம் ஆகாமலே கர்பம் தரித்த பெண்..கிணற்றில் வீசப்பட்ட பிறந்தக் குழந்தை
பழனியருகே திருமணமாகாத பெண்ணிற்கு பிறந்தகுழந்தையை கிணற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரசவமான பெண்ணும் உயிரிழந்தநிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள ஆயக்குடியை சேர்ந்தவர் மணியன்.இவரது மனைவி தங்கம். இவர்களுக்கு மங்கையர்க்கரசி(25)என்ற மகளும், காளிதாஸ்(22) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் மங்கையர்க்கரசிக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று சேர்க்கப்பட்டார்.
சிகிச்சையின் போது மாசிலாமணி கர்பமாக இருந்து சிலமணி நேரத்திற்கு முன்பாக குழந்தை பிறந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவர்கள் கேட்டபோது முன்னுக்குபின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் ஆயக்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த ஆயக்குடி போலீசார் விசாரணை நடத்தியதில் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் மங்கையர்க்கரசி திருமணமாகமலேயே கர்ப்பமானதும், மங்கையர்க்கரசி கர்ப்பம் தரித்தது வெளியில் தெரியாமல் இருக்க வீட்டிலேயே பிரசவம் பார்த்ததும் தெரியவந்தது. மேலும் மங்கையர்க்கரசிக்கு ஆண்குழந்தை ஒன்று இறந்தே பிறந்ததாகவும், அந்த குழந்தையின் உடலை மங்கையர்க்கரசியின் தம்பி காளிதாஸ் கிணற்றில் வீசியதாகவும் தெரிவித்தனர்.
தொடர்ந்து கர்ப்பிணி மங்கையர்க்கரசிக்கு இரத்தப்போக்கு அதிகமானதால் மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாகவும் தெரிவித்தனர். இந்நிலையில் மங்கையர்க்கரசியும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் மங்கையர்க்கரசி கர்ப்பமாவதற்கு காரணமானவர் யார்? மங்கையர்க்கரசிக்கு பிறந்த ஆண்குழந்தை இறந்தே பிறந்ததா? அல்லது கொலை செய்யப்பட்டதா? என்றும், குழந்தையின் உடலை கிணற்றில் வீசியதற்கான காரணம் ஆகியவை குறித்து ஆயக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணற்றில் வீசப்பட்ட குழந்தையின் உடலை தீயணைப்பு படையினர் தேடி வருகின்றனர்.இச்சம்பவம் பழனி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.