பிரபல பேஷன் டிசைனர் பிரதியுஷா கேரிமெல்லா மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி
பிரபல ஃபேஷன் டிசைனர் பிரதியுஷா குளியலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பிரதியுஷா கேரிமெல்லா
தெலுங்கு சினிமாத்துறையில் பிரபல பேஷன் டிசைனராக வலம் வந்தவர் பிரதியுஷா கேரிமெல்லா (36). இவர், ஐதராபாத்தில் உள்ள பஞ்ஜாரா ஹில்ஸ் பகுதியில் வசித்து வந்தார். சினிமாவில் கடந்த 2013ம் ஆண்டு முதல் பேஷன் டிசைனராக பணியாற்றி வரும் இவர், பல சினிமா நட்சத்திரங்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். இத்துறையில் பிரதியுஷா பல விருதுகளை வாங்கியுள்ளார்.
இவர் ஜாக்குலின், மாதுரி தீட்சித், கஜோல், பிரியங்கா சோப்ரா, வித்யா பாலன், ரவீனாடாண்டன், ஸ்ருதிஹாசன், ரகுல்ப்ரீத்சிங் உள்ளிட்ட பிரபல முன்னணி நடிகைகளுக்கு டிசைனராக இருந்து வந்துள்ளார்.
மர்ம மரணம்
இந்நிலையில், நேற்று அவர் வசித்து வந்த வீட்டில் மர்மமான முறையில் பிரதியுஷா இறந்து கிடந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பிரதியுஷா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பிரதியுஷா சடலமாக கண்டெடுக்கப்பட்ட குளியலறையில் கார்பன் மோனாக்சைடு விஷவாயு கொண்ட பாட்டில் ஒன்று இருந்தது. அதனை சுவாசித்து பிரதியுஷா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு யாராவது இதில் சம்பந்தப்பட்டுள்ளனரா என்று போலீசார் சந்தேகமடைந்துள்ளனர்.
இதனால், இந்த மரணம், சந்தேக மரணம் என்று போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் உறவினர்கள், நண்பர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.