துரோகி எடப்பாடியே...மதுரைக்குள் நுழையதே..பரபரப்பை கிளப்பும் போஸ்டர்கள்
மதுரை மண்ணிற்குள் எடப்பாடி பழனிசாமி நுழைய கூடாது என கூறி தேனி மாவட்டத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாநில மாநாடு
வரும் 20-ஆம் தேதி அதிமுகவின் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச்செயலாளராக பதவி ஏற்று கொண்ட பின் நடைபெறும் முதல் மாநில மாநாடு என்பதால் இதற்கான ஏற்பாடுகள் கட்சியின் சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த மாநாட்டில் கட்சியின் பல தரப்பட்ட முக்கிய தலைவர்களும், தொண்டர்களும் திரளான முறையில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் காரணமாக ஏற்பாடு பணிகளில், முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு முன்னின்று மேற்பார்வை செய்து வருகிறார். எடப்பாடி பழனிசாமியின் அரசியல் பயணத்தில் மிக முக்கிய இடத்தை இந்த மாநாடு வகிக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், தேனி மாவட்டத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துரோகி எடப்பாடியே
பசும்பொன் தேசிய கழகம் சார்பாக ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டியில், சாதிய வன்மத்துடன் 10.5% உள் இட ஒதுக்கீடு மூலம் நம் பிள்ளைகளின் வாழ்வாதாரத்தை சிதைக்க நினைத்த எடப்பாடி பழனிசாமி மற்றும் இனத்துரோகியை புறக்கணிப்போம் என அச்சடிக்கப்பட்டுள்ளது.
அதோடு, மதுரை மாநாடு நடத்தினால் மட்டும் மறந்து விடுவோமா உங்கள் துரோகத்தை, புறக்கணிப்போம் எடப்பாடியை, புரிந்து கொள்வோம் அரசியல் துரோகத்தை என குறிப்பிடப்பட்டு, எடப்பாடியே மதுரை மண்ணிற்குள் நுழையாதே என்று ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களால் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.