மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அடுத்த அடி... விலகிய முக்கிய நிர்வாகி
மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து ஆதிதிராவிடர் நல அணி மாநில செயலாளர் பூவை ஜெகதீஷ் குமார் விலகுவதாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு ஜெகதீஷ்குமார் எழுதிய கடிதத்தில், “மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் ஆதிதிராவிடர் நல அணி (SC,ST) பூவை ஜெகதீஷ்குமார் ஆகிய நான், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து உடனடியாக விலகுகிறேன். இப்படிப்பட்ட ஒரு முடிவினை நான் இன்று எடுப்பதற்கான காரணத்தை அனைவருக்கும் தெரிவிப்பது எனது கடமை. 2018 ஆம் ஆண்டு தலைவர் கமல்ஹாசன் அவர்கள் என்னை அரசியலுக்கு அழைத்தார்.
அன்றிலிருந்து கட்சிக்காக உண்மையாகவும் நேர்மையாகவும் உழைத்தேன். 2019ஆம் ஆண்டு சட்டமன்ற இடைத்தேர்தலில் எனக்கு பூந்தமல்லி தொகுதியில் வாய்ப்பளித்தார். 2021 கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் வாய்ப்பளித்தார். அதற்கு என் மனமார்ந்த நன்றி. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இரண்டு ஆண்டாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு கட்சிக்கு சம்பந்தமில்லாத வியாபார நிறுவனங்கள் கட்சிக்குள் செயல்பட்டு வந்ததால் கட்சி தொண்டர்கள் மத்தியில் வரவேற்பை இழந்தது.

மேலும் 2021 தேர்தலில் எஸ்சி எஸ்டி சட்டமன்ற எல்லா தொகுதியிலும் போட்டியிட மறுத்துவிட்டு கூட்டணி கட்சிகளுக்கு சக்திக்கு மீறிய தொகுதிகளை கொடுத்ததால் கட்சியின் தோற்றம் சீர்குலைந்து போனது.
அத்துடன் கட்சியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட மாநில நிர்வாகிகள் குறிப்பாக கோயம்புத்தூர் டாக்டர் மகேந்திரன் அவர்களின் கடும் உழைப்பை நிராகரித்ததோடு வீண் பழி சொல்லி நீக்கம் செய்ததால் கட்சியின் கட்டமைப்பு சிதறிப் போய் விட்டது. தீவிரமாக செயல்பட்ட என்னை போன்ற உண்மையான செயல் வீரர்கள் தங்கள் தலைமை செயல்பாட்டின் மீது நம்பிக்கை இழந்து போனது.
எனவே நான் இத்தகைய சூழ்நிலையில் எனது பொறுப்புகளில் இருந்து விடுவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.