ஏழை மக்களுக்கு உதவும் வகையில்தான் பட்ஜெட் இருக்கிறது- நிர்மலா சீதாராமன் விளக்கம்
ஏழை மக்களுக்கு உதவுவதற்காகவே டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதே தவிர செல்வந்தர்களுக்காக கிடையாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் விளக்கம் அளித்திருக்கிறார்.
அப்போது அவர் பேசுகையில், பணக்காரர்கள், ஏழைகளுக்கு உதவி செய்யும் வகையில் பட்ஜெட் அமைக்கப்பட்டிருக்கிறது. தொழிலதிபர்களுக்கான அரசு என்றால் ஊரக சாலைத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுமா? மத்திய பட்ஜெட்டை தொழிலதிபர்களுக்கு ஆதரவான பட்ஜெட் அமைந்ததுபோல பொய்யான பிம்பத்தை எதிர்க்கட்சிகள் கட்டமைத்து காட்டுகின்றன.
தொழிலதிபர்கள், வருமான வரி செலுத்துவோரை மத்திய அரசு மதிக்கின்றன. தொழில்துறை வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் பட்ஜெட் அமைக்கப்பட்டிருக்கிறது.
பாதுகாப்புத்துறையின் ஒவ்வொரு துறைக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மேற்கு வங்க அரசு பயன்பெறும் விவசாயிகளின் பட்டியலை அளிக்காததால், உதவித் தொகை இன்னும் சென்றடையாத நிலை இருக்கிறது. 80 கோடி மக்களுக்கு இலவச உணவுப் பொருள் வழங்கப்பட்டுள்ளன. 8 கோடி மக்களுக்கு இலவசமாக எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது.
ஏழைகள், முதியோர், விதவைப் பெண் போன்ற 4 கோடி மக்களுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.