கொரோனாவால் தாய் - மகன் உயிரிழந்த சோகம் : இறுதி சடங்கு செய்ய யாரும் இல்லை!
சென்னையில் கொரோனா பாதிப்பால் தாயும், மகனும் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு இறுதி சடங்கு செய்ய உறவினர்கள் முன்வராத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார் . முதலில் இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டது.
இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவரது தாய்க்கும் உடல்நிலை குறைபாடு ஏற்படவே அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் அவருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் மகன் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த அவரது தாய், மகன் இறந்த மறுநாளே அவரும் உயிரிழந்துள்ளார். இவர்கள் இருவரின் இறுதி சடங்குகளை செய்ய அவர்களின் உறவினர்கள் யாரும் முன்வரவில்லை.
இதையடுத்து பூந்தமல்லி ஒன்றிய கவுன்சிலர் கௌதமன், ஊராட்சி மன்ற தலைவர் ஷீலா சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து தாய்-மகன் இருவரின் உடல்களையும் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஊராட்சி மன்றம் சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது