பாஜக குறித்து பொன்னையன் சொன்னது அவரது தனிப்பட்ட கருத்து : விளக்கம் கொடுத்த ஓ.பி.எஸ், இ.பி.எஸ்
பாஜக குறித்து அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் கூறியது அவரது சொந்த கருத்து என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
சென்னை ராயபுரத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது பேசிய ஓபிஎஸ், கடந்த 29 மற்றும் 30-ஆம் தேதி நடைபெற்ற அம்மா பேரவையின் திறன் மேம்பாட்டு கூட்டத்தில் தமிழ்நாட்டில் பாஜக வளர்வது அதிமுகவிற்கு நல்லதல்ல என்று பேசிய கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையனின் கருத்து, அவரது தனிப்பட்ட கருத்து என தெரிவித்தார்.
அப்போது தொடர்ந்து பேசிய எடப்பாடி , அதிமுக சார்பில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், ஆர்.தர்மர் ஆகிய இருவரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என்றும் இருவரின் வெற்றிக்கு துணை நின்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், பாமக மற்றும் பாஜக தலைவர்கள் அனைவரும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
மேலும், பாஜகவின் சட்டமன்ற கட்சி தலைவர் அதிமுகவுக்கு சான்று அளிக்க வேண்டிய அவசியமில்லை, அதிமுக சட்டப்பேரவையில் எப்படி செயல்படுகிறது என்பது மக்களுக்கு நன்கு தெரியும்.
மக்களின் பிரச்னையை புள்ளி விவரத்தோடு சட்டமன்றத்தில் எடுத்துரைத்துள்ளதாக கூறினார், அதே சமயம் ,திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் திமுக ஆட்சியில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்திருப்பதாகவும் குற்றசாட்டினார்.