அமைச்சர் பொன்முடியை அலுவலகத்தில் வைத்து துருவி துருவி கேள்வி எழுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள் - கைது இல்லை என அறிவிப்பு..!
அமைச்சர் பொன்முடியை அலுவலகத்தில் வைத்து 4 மணி நேரத்திற்கும் மேலாக வைத்து துருவி துருவி விசாரணை மேற்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை அதிகாலை 3 மணிக்கு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
குவாரி ஒப்பந்த குற்றச்சாட்டு
கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் கனிம வளத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில் விதிகளை மீறி தனது மகன் டாக்டர் கவுதம சிகாமணிக்கு செம்மண் குவாரி ஒப்பந்தம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குவாரியில் ஒப்பந்தத்துக்கு மாறாக லாரி மூலம் 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு செம்மண் எடுத்ததாகவும், இதன் மூலம் அரசுக்கு ரூ.28 கோடி இழப்பீடு ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது.
அதன் பேரில், கடந்த 2012-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் பொன்முடி, கவுதம சிகாமணி உள்பட 7 பேர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் பொன்முடி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கவுதம சிகாமணி எம்.பி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு கடந்த ஜுன் மாதம் 19ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை தள்ளுபடி செய்ததுடன் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
பரவிய தகவல்
இந்த முறைகேட்டில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்று இருக்கலாம் என்று ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. இந்த வழக்கை மத்திய அரசின் அமலாக்கத்துறை கையில் எடுக்கலாம் என்ற தகவலும் சமீபத்தில் வெளியாகி இருந்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்ந்து அமலாக்கத்துறையின் வலையில் அடுத்து சிக்கப்போவது அமைச்சர் பொன்முடி என்று சமூக வலைத்தளங்களிலும் கருத்துகள் பகிரப்பட்டு வந்தன.
வீட்டிற்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள்
இந்த நிலையில் நேற்று (ஜுலை 17) காலை சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலாணியில் உள்ள அவரது இல்லத்திற்கு காலை 7 மணிக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் 7 பேர் விசாரணை நடத்த தொடங்கினார்.
பின்னர் அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும் வங்கி ஊழியர்கள் மற்றும் நகை மதிப்பீட்டாளர்கள் உள்ளிட்டோரை வரவழைத்து சோதனைகளை நடத்தினர்.
சென்னையை தவிர விழுப்புரத்தில் உள்ள பொன்முடி வீடு, கவுதம சிகாமணி வீடு, அவருக்கு சொந்தமான சூர்யா பொறியியல் கல்லுாரி, அலுவலகம் உள்ளிட்ட மொத்தம் 9 இடங்களில் சோதனை நடைபெற்றதாக தகவல் வெளியானது.
சாவி தயாரிப்பவரை வரவழைத்த அதிகாரிகள்
விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை 8.10 மணி முதல் சோதனையை தொடங்கினர்.
வீட்டில் இருந்த பீரோவை திறந்து சோதனை செய்ய அதிகாரிகள் முடிவு செய்து பீரோ சாவியை கேட்ட போது சாவி குடும்பத்தினரிடம் இருப்பதாகவும் அவர்கள் இங்கு இல்லை என்று கூறவே மாற்று சாவி தயாரித்து விற்பனை செய்யும் தொழிலாளியான தனபால் என்பவரை உள்ளூர் போலீசாரின் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் வரவழைத்தனர்.
அங்கு வந்த தனபால் அமைச்சர் பொன்முடியின் வீட்டில் இருந்த பீரோக்களை மாற்று சாவி மூலம் திறந்தார். அதிலிருந்த ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.ஆனால் பீரோ லாக்கருக்கான சாவியை அவரால் தயார் செய்து கொடுக்க முடியாமல் போனது.
பணம் சிக்கியதா?
சென்னையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அமலாகத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.70 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டதாகவும், ரூ.10 லட்சம் மதிப்புள்ள இங்கிலாந்து பவுண்ட், மற்றும் அமெரிக்கா டாலர் ஆகியவை சிக்கியதாக தகவல் வெளியானது. இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
7 மணி நேரம் தனி அறையில் விசாரணை
காலை முதல் மாலை வரை சுமார் 13 நேரம் வீட்டில் சோதனை மற்றும் அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரிபவன் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு சென்று விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து அமைச்சரின் சொந்த காரிலேயே அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை தனி அறையில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். நேற்று இரவு 8 மணி முதல் நடைபெற்று வந்த விசாரணை இன்று நள்ளிரவு 3 மணியளவில் நிறைவடைந்தது.
சென்னை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வந்த சோதனைகள் முடிவடைந்தது. நேற்று காலை 7 மணி முதல் நடைபெற்ற சோதனை 19 மணி நேரத்திற்கு பிறகு நிறைவு பெற்றது.
அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நிறைவு பெற்றதை அடுத்து அமைச்சர் பொன்முடி அதிகாலை 3 மணிக்கு அங்கிருந்து வீடு திரும்பினார்.
கைது நடவடிக்கை இல்லை
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமலாக்கத்துறை துணை இயக்குநர் கார்த்திக் அமைச்சர் பொன்முடி மீது கைது நடவடிக்கை இல்லை என்று தெரிவித்தார்.
அமைச்சர் பொன்முடி மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.