பொங்கல் விடுமுறை: சென்னையில் மூன்று நாட்களுக்கு கடற்கரை, பூங்காக்களுக்கு தடை
பொங்கல் விடுமுறையான வரும் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரையிலான 3 நாட்களுக்கு கடற்கரை, பூங்காக்களுக்கு அனுமதியில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு தரப்பில் வெளியான அறிக்கையில், “காணும் பொங்கல் அன்று கடற்கரைகளில் அளவுக்கு அதிகமான பொதுமக்கள் கூட்டம் கூடுவதால் கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்கும் வகையில், மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் காணும் பொங்கல் அன்று மட்டும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில், செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அண்ணா உயிரியியல் பூங்கா, மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள கிண்டி தேசிய பூங்காவிலும் மற்றும் அனைத்து கடற்கரையிலும் அளவுக்கு அதிகமான பொதுமக்கள் கூட்டம் கூடுவதால் மேற்கண்ட அனைத்து இடங்களிலும் ஜன.,15, 16, 17 ஆகிய விடுமுறை நாட்களில் மட்டும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை”என்று அதில் கூறப்பட்டுள்ளது.