வெட்கமா இல்லை , வாய்க்கரிசி இடுவதுதான் விடியல் ஆட்சியா? : கொந்தளித்த சீமான்

pongal package seaman
By Irumporai Jan 15, 2022 12:09 PM GMT
Report

பொங்கல் பரிசுத்தொகுப்பில் பல்லி கிடந்ததாகக் குற்றஞ்சாட்டியவர் மீது அவதூறு வழக்குத் தொடுப்பதா? என சீமான் கண்டண அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பொது விநியோகக்கடைகளில் வழங்கப்பட்டப் பொங்கல் பரிசுத்தொகுப்பில் பல்லி கிடந்ததாகக் குற்றஞ்சாட்டிய திருத்தணியைச் சேர்ந்தப் பயனாளி நந்தன் மீது அவதூறு வழக்குத் தொடுத்ததன் விளைவாக, அவரது மகன் குப்புசாமி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘பொது விநியோகக்கடைகளில் வழங்கப்பட்டப் பொங்கல் பரிசுத்தொகுப்பில் பல்லி கிடந்ததாகக் குற்றஞ்சாட்டிய திருத்தணியைச் சேர்ந்தப் பயனாளி நந்தன் மீது அவதூறு வழக்குத் தொடுத்ததன் விளைவாக, அவரது மகன் குப்புசாமி தீக்குளித்து மாண்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன். தனது தந்தை மீது வழக்குத் தொடுக்கப்பட்ட விரக்தியிலேயே மகன் குப்புசாமி மனவேதனைக்கு ஆட்பட்டு தற்கொலை செய்துகொண்டாரெனும் செய்தியானது பெரும் மனவலியைத் தருகிறது

பொறுப்புடனும், கடமையுணர்ச்சியுடனும் செயல்படத்தவறி, எளியவர்கள் மீது அதிகாரப் பலத்தைச் செலுத்தி, எதேச்சதிகாரப்போக்கைத் திணிக்கும் அரசின் கொடுங்கோல் நடவடிக்கையே ஒரு உயிரை அநியாயமாகப் போக்கியிருக்கிறது.

தனக்கு வழங்கப்பட்டப் பொங்கல் பரிசுத்தொகுப்புப் பொருட்களில் இறந்த பல்லி கிடந்ததாகக் கூறி, பயனாளி நந்தன் குற்றஞ்சுமத்தியதால் அரசுக்குக் கெட்டப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அவதூறு பரப்புவதாகக்கூறி, அவர் மீது சட்டத்தைப் பாய்ச்சிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

திமுக அரசால் வழங்கப்பட்டப் பொங்கல் பரிசுத்தொகுப்புகளிலுள்ள பல பொருட்கள் தரம் குன்றியிருப்பது குறித்து பொதுமக்கள் பரவலாக அவலக்குரலெழுப்பி வரும் நிலையில், அவர்களை அச்சுறுத்தும் வகையிலும், அரசின் குறைபாடுகளையும், தவறுகளையும் மறைக்கும் வகையிலுமே நந்தன் மீது வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது.

இது என்னமாதிரி ஜனநாயகச்செயல்பாடு? இத்தகைய அணுகுமுறை எந்தவகையில் ஏற்புடையதாகும்? தரமற்றப் பொருட்களைத் தந்துவிட்டு, அதுகுறித்து பொதுமக்கள் எவரும் புகார் தெரிவிக்காவண்ணம், அவர்களின் வாயடைக்க முனைவதுதான் சமூகநீதி ஆட்சியா? பொங்கலிட அரிசி தருவதாகக்கூறிவிட்டு, ஒரு உயிர் போகக்காரணமாக இருந்து

வாய்க்கரிசி இடுவதுதான் விடியல் ஆட்சியா? வெட்கக்கேடு! ஆகவே, ஆளும் திமுக அரசின் குறைகளையும், குற்றங்களையும் சுட்டிக்காட்டி வெளிப்படுத்தும் எளியவர்கள் மீது சட்டத்தின் மூலம் அடக்குமுறையைப் பாய்ச்சும் கொடுங்கோல் செயல்பாடு.

அச்சுறுத்தலால் தனது மகனை இழந்து, பாதிக்கப்பட்டு நிற்கும் நந்தன் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டையும், நீதியையும் பெற்றுத் தர வேண்டுமென தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.