பொங்கல் தொகுப்பில் பல்லி - புகார் கொடுத்த தந்தை - தற்கொலை செய்து கொண்ட மகன் - நடந்தது என்ன?

pongal gift father complained Son commits suicide
By Nandhini Jan 13, 2022 05:49 AM GMT
Report

திருவள்ளூர் மாவட்டம், தோட்டக்கார மடத்தைச் சேர்ந்தவர் நந்தன் (65). இவர் கடந்த ஜனவரி 7ம் தேதி, தமிழக அரசு வழங்கி வரும் பொங்கல் பரிசுப் பொருளை வாங்க ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கூட்டுறவு பண்டக கடை எண் 2க்கு சென்றார்.

அங்கே 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுப் பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பினார் நந்தன்.

வீட்டில், வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களைப் பிரித்து பார்த்தார் நந்தன். அப்போது, வழங்கப்பட்ட பரிசுப் பையில் இருந்த புளி பாக்கெட்டை பிரிக்கும் போது அதற்குள் இறந்துபோன பல்லி கிடந்ததாக கூறப்படுகிறது.

இதனால், அதிர்ச்சி அடைந்த நந்தன் மீண்டும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கூட்டுறவு பண்டக கடை எண் 2க்குச் சென்று விபரத்தைக் கூறினார். அப்போது, அக்கடையில் பணிபுரிந்து வரும் சரவணன் என்பவருடன் நந்தன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது, சரவணன் நந்தனை தரக்குறைவாக பேசியுள்ளார். இதனையடுத்து தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து பத்திரிக்கையாளர்களிடம் நந்தன் தெரிவித்தார். இச்செய்தி வெளியே வந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், வதந்தி பரப்புவதாகக்கூறி நந்தன் மீது திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் சரவணன். இதனால் நந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தனர்.

இந்நிலையில், தனது தந்தை மீது காவல்நிலையத்தில் பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளதாக மனமுடைந்த நந்தனின் மகன் குப்புசாமி (36) தீக்குளிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

குப்புசாமியின் அலறல் சப்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், குப்புசாமியின் உடலில் 80 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டதால், அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், குப்புசாமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, இச்சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி திருத்தணி - அரக்கோணம் சாலையில் முன்னாள் அமைச்சர் ரமணா, முன்னாள் எம்.பி கோ.ஹரி தலைமையில அ.தி.மு.க-வினர் 300-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பொங்கல் பரிசில் பல்லி விழுந்ததாக ஊழியரிடம் முதியவர் கேள்வி எழுப்பிய விவகாரத்தில் தற்போது நேர்ந்திருக்கும் உயிர்ப்பலி அப்பகுதியினரை பெரும் அதிர்ச்சியை ஆழ்த்தியிருக்கிறது.