ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை வாக்குப்பதிவு - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
ஈரோடு இடைத்தேர்தலின் தேர்தல் பரப்புரை நேற்று நிறைவு பெற்ற நிலையில், நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தேர்தல் பரப்புரை நிறைவு
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா உயிரிழந்ததை அடுத்து காலியான ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
இதையடுத்து ஆளும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனாக உள்ளிட்ட சுயேட்ச்சைகள் உள்ளிட்ட 77 பேர் களத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று தேர்தல் பரப்புரையானது நிறைவு பெற்றது. கடைசி நாள் தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி,சீமான் உள்ளிட்டோர் பரப்புரை மேற்கொண்டனர்.

இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதியில் தங்கியிருக்கும் வெளியூர் நபர்கள் வெளியேறும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தொகுதிக்கு சம்பந்தமில்லாத நபர்கள் வெளியேறினர். இதனால் பெரும்பாலான சாலைகள் மற்றும் தங்கும் விடுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
நாளை மறுநாள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மொத்தம் உள்ள 238 வாக்குச்சாவடிகளில் 32 வாக்குச்சாவடிகளை பதற்றமானதாக தேர்தல் கமிஷன் கண்டறிந்துள்ளது. அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
வாக்குப்பதிவு அன்று அனைத்து வாக்குச்சாவடிகளும் 'வெப் காஸ்டிங்' மூலம் கண்காணிக்கப்படும். பிரசாரம் நிறைவடைந்துள்ள நிலையில்,
அடுத்த 48 மணி நேரத்துக்கு கருத்துக் கணிப்பு, வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உள்ளிட்டவற்றை மின்னணு ஊடகங்களில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
வரும் 27-ம் தேதி மாலை 7 மணி வரை, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.