“இனி தப்பிக்கவே முடியாது” - விஸ்வரூபம் எடுக்கும் பொள்ளாச்சி பாலியல் வழக்கு
பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ விரைந்து விசாரித்து முடிக்கும் வண்ணம் அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருப்பதாக தமிழ்நாடு காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், ஆசிரியைகள் உள்ளிட்ட பலரை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்த கும்பல் மிரட்டி பணம் பறித்ததாக எழுந்த புகார், தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை எற்படுத்தியது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் திருநாவுக்கரசு, ரிஷ்வந்த் என்கிற சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், பொள்ளாச்சி அதிமுக நகர மாணவரணிச் செயலாளர் அருளானந்தம், ஹேரேன் பால், பாபு என்கிற பைக் பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து பொள்ளாச்சி பாலியல் வழக்கு நடந்து வரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில் அருளானந்தம் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிபிஐயில் ஆட்கள் பற்றாக்குறையால், வழக்கு விசாரணை நடத்துவதில் தாமதம் ஏற்படுகிறது என்று சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த தமிழக காவல்துறை தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ விரைந்து முடிக்க தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும், குறிப்பாக எஸ்.பி. அளவிலான ஒரு அதிகாரியை நியமித்து உதவத் தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தார்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளார்.