அமித்ஷா தலைமையில் தென்மண்டல வளர்ச்சி கவுன்சில் கூட்டம் : அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, இறையன்பு பங்கேற்பு
தென்மாநிலங்களின் முதலமைச்சர் பங்கேற்கும் தென்மண்டல வளர்ச்சி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, புதுச்சேரி மாநில முதலமைச்சர்களும், அந்த மான் நிகோபார் தீவுகளின் கவர்னர், லட்சத்தீவு நிர்வாகி பிரபுல் படேல் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஆனால், தமிழகம் சார்பில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலர் இறையன்பு ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
இக்கூட்டத்தில், நதி நீர் பங்கீடு உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு மாநிலமும் தங்களின் பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திட்டமிட்டிருக்கின்றன. ரயில்வே நிலங்களை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மாற்றுவதற்கான கொள்கையை மறுபரிசீலனை செய்யப்பட உள்ளன.
அனைத்து கடலோர மாநிலங்களிலும் மீன்பிடி படகுகளின் நீளமும், இன்ஜினின் செயல்திறனும் ஒரே மாதிரியாக இருப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பற்றி விவாதிக்க தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது. தமிழகத்திலிருந்து மணல் ‘சப்ளை’ செய்வது, வெளிநாடுகளிலிருந்து மணலை இறக்குமதி செய்வது உள்ளிட்டவை பற்றி பேச, புதுச்சேரி நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது. இன்றைய கூட்டத்தில் போக்சோ வழக்குகள் பற்றி முக்கியமாக விவாதிக்கப்பட இருக்கிறது.
