போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற சென்ற பிரியங்கா காந்தி கைது - லக்கிம்பூரில் பெரும் பரபரப்பு

politics-arrest-priyanka-gandhi
By Nandhini Oct 04, 2021 04:47 AM GMT
Report

லக்கிம்பூரில் நடந்த போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டிருக்கிறார்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தர பிரதேசத்தில் தொடர் போராட்டங்கள் நடந்துவருகிறது. இந்த போராட்டத்தில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாக பங்கேற்று வருகிறார்கள். மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா லக்கிம்பூர் கேரி மாவட்டத்தின் திகுனியா அருகே உள்ள பன்வீர்பூரை சேர்ந்தவர்.

இந்த கிராமத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மாநில துணை முதல் மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக அறிவிக்கப்பட்டது. அப்போது, அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அண்டை கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் திகுனியாவில் திரண்டார்கள். அப்போது, அந்த வழியாக பா.ஜ.க.வினரின் வாகன அணிவகுப்பு ஒன்று வந்துக்கொண்டிருந்தது.

இதில் கார் ஒன்று விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்கள். மேலும் பலர் காயமடைந்தார்கள். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பா.ஜ.க.வினர் வந்த வாகனங்களை அடித்து நொறுக்கினார்கள். இதனையடுத்து, அங்கு வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தார்கள். இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், வன்முறை நடைபெற்ற பன்வீர்பூருக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியாங்கா காந்தி இன்று நேரில் சென்றார். லக்கிம்பூரில் நடந்த போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற சென்ற பிரியங்கா காந்தியை பன்வீர்பூர் கிராமத்திற்குள் நுழைய போலீசார் அனுமதிக்கவில்லை. அவரை கிராம எல்லையிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டதால், அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற சென்ற பிரியங்கா காந்தி கைது - லக்கிம்பூரில் பெரும் பரபரப்பு | Politics Arrest Priyanka Gandhi