நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை திமுக மிரட்டு வருகிறார்கள்- சீமான் பகீர் குற்றச்சாட்டு
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை திமுகவினர் மிரட்டி வருவதாக சீமான் குற்றஞ் சாட்டியிருக்கிறார்.
திலீபன் நினைவுநாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு சென்னையில் மலர் வணக்கம் செலுத்தினார் சீமான். அதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது -
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை திமுகவினர் மிரட்டி வருகின்றனர். பல இடங்களில் சிலரை கடத்திக் கொண்டு சென்று வைக்கின்றனர்.
வேட்புமனுத் தாக்கலுக்கு நேரம் முடியும் வரை நாம் தமிழர் கட்சியினரை திமுகவினர் பல்வேறு இடையூறுகளை செய்கின்றனர். திமுகவுக்கு எங்களை பார்த்து ஏன் பயம் வருகிறது. நாங்கள் 10 ஓட்டுக்கள் வாங்கினால் உங்களுக்கு என்ன கவலை, 100 ஓட்டுக்கள் வாங்கினால் உங்களுக்கு என்ன கவலை? தேர்தலில் மோதிப் பார்ப்போம்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களிடம் திமுகவினர் பேரம் பேசுகிறார்கள். வெற்றி பெற்றால் கான்ட்ராக்ட் பணி தருகிறேன், அரசு வேலை வாங்கித் தருகிறேன். போட்டியிலிருந்து விலக்கிக்கொள்ளுங்கள் என்று கூறி வருகிறார்கள். ஆனால் எங்கள் கட்சி வேட்பாளர்கள் எதற்கும் பணியமாட்டார்கள்.
முடிந்தால் அவர்களை நேருக்கு நேர் எதிர்த்து நின்று தேர்தலில் வென்று கொள்ளுங்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை தக்க வைத்து தங்களுக்கும் வாக்கு வங்கி இருக்கிறது என்பதை நிரூபணம் செய்தது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற 3-வது கட்சி எது என்பதில் காங்கிரஸ் கட்சியோடு போட்டி போட்டு நின்றது நாம் தமிழர் கட்சி. இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி குறிப்பிட்டு சொல்லும் வகையில் வாக்கு சதவீதத்தை பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.