இது தமிழக அரசே அல்ல… தலிபான் அரசு… - எச். ராஜா கடும் கண்டனம்
தமிழகத்தில் ஆட்சி செய்வது தமிழக அரசு அல்ல, இது தலிபான் அரசு என பாஜக பிரமுகர் எச்.ராஜா விமர்சனம் செய்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி விழா நாளை மக்களால் கொண்டாடப்பட உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலமாகச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இருப்பினும், வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு, நீர்நிலைகளில் கரைக்கலாம் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், தென்காசி மாவட்டம் புளியங்குடியில் சாலையோரம் வடமாநிலத்தவர் ஒருவர் விநாயகர் சிலைகளை விற்பனை செய்து கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக ரோந்து சென்ற புளியங்குடி போலீசார் சிலைகளை பறிமுதல் செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் சென்றன்ர். இதைப்பார்த்தவர் சிலைகளை விற்பனைக்கு தானே வைத்திருக்கிறார்.
ஏன் பறிமுதல் செய்கிறீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த போலீசார், இதுதொடர்பாக காவல் ஆய்வாளரிடம் கேளுங்கள், காவல் நிலையத்தில்தான் உள்ளார் என பதிலளித்துள்ளனர். சிலைகளை போலீசார் பறிமுதல் செய்ததை அங்கு இருந்தவர்கள் வீடியோவில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானதால் பெரும் சர்ச்சையை எழுப்பியது. இந்நிலையில், சிலைகள் திரும்பவும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக காவல் ஆய்வாளர் ராஜாராம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக, காவல்துறையின் இந்த செயலுக்கு பாஜக நிர்வாகி எச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தமிழக அரசு இந்துக்களுக்கு எதிரான தலிபானிய அரசு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இது போன்று 100 கணக்கான இடங்களில் நடந்துள்ளது. இவைகளை திரட்டி உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்புவோம். இந்துக்கள் வீட்டில் கூட விநாயக சதுர்த்தி கொண்டாட விடாமல் தடுக்கும் திமுக அரசின் அராஜகப் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது’ என பதிவிட்டுள்ளார்.
