எல்.முருகன் பேனரை மர்ம கும்பல் கிழிப்பு - தாராபுரம் பகுதியில் பதற்றம்!
தாராபுரத்தில் வைக்கப்பட்ட எல்.முருகன் பேனரை அடையாளம் தெரியாத நபர்கள் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் நாகர்கோவில், கோவை மேற்கு, மொடக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளில் பாஜக வெற்றி அடைந்துள்ளது.
ஆனால், அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தொகுதியில் தோல்வி அடைந்தார். திமுக சார்பில் அவரை எதிர்த்து போட்டியிட்ட கயல்விழி 1,393 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில், தாராபுரம் தொகுதியில் எல்.முருகனுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதை மர்ம நபர்கள் சிலர் கிழித்தெறிந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
