தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் கொரோனாவுக்கு ஏராளமான உயிர்களை இழக்க நேரிடும் - ராமதாஸ்

politics
By Nandhini May 04, 2021 08:30 AM GMT
Report

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் ஏராளமான உயிர்களை இழக்க நேரிடும் என்று பாமக நிறுவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது -

தமிழ்நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை கட்டுப்படுத்த முடியாத வேகத்தை எட்டியுள்ளது. தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பரவல் 20,952 என்ற புதிய உச்சத்தை நேற்று எட்டியுள்ளது. கொரோனா பரவல் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 750% அதிகரித்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது மிகவும் கவலை அளிக்கிறது.

சட்டப்பேரவைத் தேர்தலின் போது பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இப்போது ஆபத்தான கட்டத்தை அடைந்திருக்கிறது. கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி தமிழகத்தின் தினசரி கொரோனா தொற்று 2817 மட்டும் தான்; சென்னையில் இந்த எண்ணிக்கை 1083 ஆக இருந்தது. ஆனால், நேற்றைய நிலவரப்படி தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை சென்னையில் 6150 ஆகவும், தமிழகம் முழுவதும் 20,952 ஆகவும் அதிகரித்துள்ளன.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தேர்தலுக்குப் பிறகு இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக் கிழமை ஊரடங்கு ஆகியவை பிறப்பிக்கப்பட்டன. அவற்றைத் தொடர்ந்து வணிக வளாகங்கள், திரையரங்குகள், குடிப்பகங்கள், பெரிய கடைகள், உடற்பயிற்சிக் கூடங்கள் ஆகியவற்றை மூட ஆணையிடப்பட்டது.

மூன்றாம் கட்டமாக நாளை மறுநாள் முதல் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50% பணியாளர்கள் மட்டுமே அனுமதி, கடைகளில் நண்பகல் 12 மணி வரை மட்டுமே வணிகம் உள்ளிட்ட கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தக் கட்டுப்பாடுகளும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உதவாது என்பது தான் எதார்த்தம்.

கடந்த ஆண்டு கொரோனா முதல் அலை பரவிய போது மார்ச் மாதம் 7-ஆம் தேதி தான் தமிழகத்தில் முதல் தொற்று கண்டறியப்பட்டது. அது ஜூலை மாதம் 27-ஆம் தேதி 6993 என்ற உச்சக்கட்டத்தை அடைய ஏறக்குறைய 150 நாட்கள் ஆயின. அதற்கு காரணம் மார்ச் மாதம் கடைசி வாரத்திலிருந்து தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட முழு ஊரடங்கும், மக்களிடம் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வும் தான். ஆனால், இப்போது மார்ச் மாதத் தொடக்கத்தில் 400 என்ற அளவில் இருந்த தினசரி தொற்று எண்ணிக்கை 60 நாட்களில் 21,000 என்ற இமாலய எண்ணிக்கையைத் தொட்டிருக்கிறது. இதற்குக் காரணம், அரசியல் சூழலால், போதிய அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாதது தான்.

இனியாவது முழு ஊரடங்கு போன்ற கடுமையாக நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் கொரோனாவைக் கட்டுப்படுத்துவது சாத்தியமற்றதாகி விடும். இப்போதே ஆக்சிஜன், ரெம்டெசிவிர் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. தினசரி உயிரிழப்பும் 150-ஐக் கடந்து விட்டது. கொரோனா பரவல் சூழலின் தீவிரத்தை இனியும் முழுமையாக உணர்ந்து கொள்ளாவிட்டால், வட மாநிலங்களைப் போன்ற சூழலை தவிர்க்க முடியாது.

முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதால் மாநில அரசுக்கும், தொழில் மற்றும் வணிகத்துறைக்கும் ஏற்படும் பொருளாதார இழப்பையும், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு ஏற்படும் வாழ்வாதார இழப்பையும் நான் நன்றாக அறிவேன். ஆனால், குறித்த காலத்தில் இந்த நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால், கொரோனாவுக்கு ஏராளமான உயிர்களை இழக்க வேண்டியிருப்பதுடன், நோய்ப்பரவல் கட்டுக்கடங்காமல் போகும் போது ஏற்படும் சூழலால் இன்னும் மோசமான பொருளாதார இழப்புகளை சந்திக்க நேரிடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.