மே. 2க்கு பிறகு முழு ஊரடங்குக்கு வாய்ப்பு இருக்காது- மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
கொரோனா 2.0 பாதுகாப்பாகவும், பக்க பலமாகவும் இருப்போம் என்றும், மே. 2ம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்குக்கு வாய்ப்பு இருக்காது என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா 2ம் அலையின் தாக்கம் அதீதிவிரமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால், மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது. நிலைமையை கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு நேர முழு ஊரடங்கையும், ஞாயிறு தோறும் முழு ஊரடங்கையும் பிறப்பித்துள்ளது.
இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது -
கொரோனா 2.0 எனப்படும் இந்த இரண்டாவது அலையின் உயிர்ப்பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதில் நம் கழகத்தைச் சேர்ந்தவர்களும் மரணமடைகிற வேதனைச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தன் உயிர் போலப் பிற உயிர்களை நேசிப்பதும் – பிற உயிர்களைப் போலத் தன்னுயிர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதும் இந்தப் பேரிடர்ச் சூழலில் இன்றியமையாததாகும். அதனை உணர்ந்து கழகத்தினர் கவனத்துடன் கடமையாற்ற வேண்டும்.
"கொரோனா 2.0 பாதுகாப்பாக இருப்போம்.. பக்கபலமாக நிற்போம்!"
— DMK (@arivalayam) April 23, 2021
- கழக தலைவர் @mkstalin அவர்கள் கடிதம்.
Link: https://t.co/sg5JodBSdq#CoronaSecondWave #DMK #MKStalin pic.twitter.com/p2UIUfBoKf
முதல் அலை தாக்கத்தின்போது, நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. எனினும், அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள், உளவியல் சிக்கல்கள், தனிநபர் பாதிப்புகள் இவற்றிலிருந்து இன்றுவரை முழுமையாக மீள முடியவில்லை. தொழில் வாய்ப்புகளை இழந்தோர், வேலையினைப் பறிகொடுத்தோர் இப்போதும் மன உளைச்சலில் தவிக்கின்றனர்.
அதனால், இந்த இரண்டாவது அலைத் தாக்கத்தின்போது குறிப்பிட்ட அளவிலான கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களும்இ கழகத்தினரும் அவற்றுக்குக் கட்டுப்பட்டுச் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
மே 2-க்குப் பிறகும் முழு ஊரடங்குக்கு வாய்ப்பிருக்காது என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோம். அதுவரை, கொரோனா பரவல் குறையும் வகையில் உரிய பாதுகாப்பு முறைகளைக் கையாள்வோம். நமக்கு நாமே பாதுகாப்பாக இருப்போம். நம்மைப் போன்றவர்களுக்கு பக்க பலமாக நிற்போம்” என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.