என் மனதுக்கு மிகவும் வலியை ஏற்படுத்துகிறது – பிரதமர் மோடி உருக்கமான பதிவு!
கொரோனாவின் 2ம் அலை இந்தியாவில் அசுர வேகத்தில் பரவி வருகிறது. கொரோனாவின் பிடியில் மக்கள் சிக்கி தவித்து வருகிறார்கள். நாளுக்கு நாள் கொரோனாவினால், பாதிக்கப்படுபவர்களும், பலியாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நிலைமையை சமாளிக்க முடியாமல் மத்திய அரசும், மாநில அரசுத் திணறி வருகின்றன.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் செயல்பட்டு வரும் ஜாகிர் உசேன் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சப்ளை செய்ய டேங்கர் லாரி வந்தது. அந்த லாரியில் இருந்து சிலிண்டர்களுக்கு ஆக்சிஜன் மாற்றப்பட்ட போது, பைப் லீக் ஆனதால் வாயுக்கசிவு ஏற்பட்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தால் 30 நிமிடங்கள் ஆக்சிஜன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால், அம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 22 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அம்மாநில சுகாதாரத்துறை, வாயுக்கசிவு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மற்ற நோயாளிகள் நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயுக்கசிவால் 22 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், ஆக்சிஜன் வாயுக்கசிவால் நாசிக்கில் 22 நோயாளிகள் இறந்த சம்பவம் மனதில் வலியை ஏற்படுத்துகிறது. இச்சம்பவம் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்த நோயாளிகளின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என்று பதிவிட்டுள்ளார்.
The tragedy at a hospital in Nashik because of oxygen tank leakage is heart-wrenching. Anguished by the loss of lives due to it. Condolences to the bereaved families in this sad hour.
— Narendra Modi (@narendramodi) April 21, 2021