கொரோனாவை தடுப்பதில் மோடி படுதோல்வி அடைந்திருப்பது ஏன்? - மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கியதில் தமிழகம் முதலிடம் என்ற அவப்பெயரை அதிமுக அரசு தான் உருவாக்கி இருக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. சுமார் 80 ஆயிரம் பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், சுமார் 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சென்னையிலிருந்து ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிற்கு மத்திய அரசால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கே தினந்தோறும் 200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படும் இந்த சூழ்நிலையில், தமிழக அரசை கேட்காமல் 45 மெட்ரிக் டன் அளவு ஆக்சிஜன் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் தமிழகத்திற்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது -
கொரோனாவை தடுப்பதில் பிரதமர் மோடி இப்படி படுதோல்வி அடைந்து இருப்பது ஏன்? தடுப்பூசி விரயமாவதை தடுத்தல் , ரெம்டெசிவர், ஆக்சிஜனை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். கொரோனா ஏற்பட்டவுடன் ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.9300 மெட்ரிக் டன் ஆக்சிசனை வெளிநாடுகளுக்கு மத்திய அரசு ஏற்றுமதி செய்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாகத்தில் உலக மகா நிபுணர் என கூறப்பட்ட பிரதமர் மோடி கொரோனா தடுப்பில் படுதோல்வி அடைந்தது ஏன்? தட்டுப்பாடு நிலவும் சூழலில் 93,000 மெட்ரின் டன் ஆக்சிஜனை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தது ஏன்? 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழக அரசுக்கே தெரியாமல் மத்திய அரசு வேறு மாநிலங்களுக்கு கொடுத்துள்ளது வேதனை அளிக்கிறது.
கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கியதில் தமிழகம் முதலிடம் என்ற அவப்பெயரை அதிமுக அரசு உருவாக்கியுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.